மன் கீ பாத் நிகழ்ச்சி கேட்க இலவச ரேடியோ.. இங்க இல்லீங்க.. உத்தரகாண்ட் மாநிலத்தில் தான் இந்த கூத்து
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் முதன் முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியை கேட்பதற்காக பாஜக சார்பில் ரேடியோ வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டின் பிரதமரான மோடி அகில இந்திய வானொலி வழியாக மக்களிடையே பேசி வருகிறார். நாட்டின் தற்போதைய நிலை, அரசியல் சூழல், மக்களுக்கான திட்டங்கள் உரையாற்றி வருகிறார்.
மனத்தின் குரல் என்று தமிழிலும், மன் கீ பாத் என்ற இந்தியிலும் அந்த நிகழ்ச்சிக்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியானது 50 அத்தியாயங்களை கடந்து ரேடியோவில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் ரேடியோக்களை பயன்படுத்தும் காலம் முடிந்து விட்டதை தொடர்ந்து, எல்லா வீடுகளிலும் பெரும்பாலும் ரேடியோக்கள் இருப்பதில்லை. அதனால் மோடியின் உரையானது அனைத்து தரப்பு மக்களிடையே சென்று சேரவில்லை என்ற கருத்து பாஜக மத்தியில் இருந்து வந்தது.
அந்த குறையை போக்க உத்தரகாண்ட் மாநிலம் ஒரு நூதன முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் முதன் முறையாக பாஜகவினர் மான் கீ பாத் நிகழ்ச்சியை கேட்பதற்காக ரேடியோக்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அந்த திட்டத்தை உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் அஜய் பாட் தொடங்கி வைத்துள்ளார். கிட்டத்தட்ட மாநிலத்திலுள்ள அனைத்து பாஜக மண்டலங்களிலும் 229 ரேடியோக்களை பாஜக தொண்டர்கள் வினியோகித்து உள்ளனர். ரேடியோ வழங்குவதன் மூலம் வரும் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை பாஜக தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.