மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரிடம் ரூ200 கோடி நன்கொடை வாங்கிய பா.ஜ.க.: ஆசாம்கான் புகார்
டெல்லி: மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரிடம் இருந்து ரூ200 கோடி பா.ஜ.க. நன்கொடை வாங்கியதாக உத்தரப்பிரதேச அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான ஆசாம்கான் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆசாம்கான் கூறியதாவது:
மாட்டிறைச்சி விவகாரத்தில் பா.ஜ.க. அரசியல் செய்கிறது. ஆனால் மாட்டிறைச்சியை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நபரிடம் இருந்து ரூ.200 கோடியை நன்கொடையாக பா.ஜ.க. பெற்றுள்ளது. இதில் கருப்புப் பணமாக எவ்வளவு பெறப்பட்டது என்பதை அக்கட்சி முதலில் தெரிவிக்க வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு எவ்வளவு பணம் நன்கொடையாக பா.ஜ.க. வசூலித்தது என்பதையும் அக்கட்சி தெரிவிக்க வேண்டும்.
கங்கை நதியை சுத்தப்படுத்துவது குறித்து மத்திய அரசு பேசி வருகிறது. மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்து விட்டது. இன்னும் 4 ஆண்டுகளே இருக்கின்றன. ஆதலால், கங்கையை சுத்தப்படுத்தும் பணி எப்போது முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும்
இவ்வாறு ஆசாம்கான் கூறினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஜய் பகதூர் பதக் கூறுகையில், பா.ஜ.க. மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ஆசாம்கான் தெரிவித்துள்ளார்.
ராம்பூரில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் பிறந்த தின கொண்டாட்டத்துக்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பதை முதலில் அவர் தெரிவிக்க வேண்டும். முலாயம் சிங்கின் பிறந்த தின கொண்டாட்டத்துக்கு மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிடம் இருந்து பணம் அனுப்பப்பட்டதாக, ஆசாம்கானே தெரிவித்துள்ளார் என்றார்.