பாஜக 45 தொகுதிகளை வெல்லும்! ஆம் ஆத்மிக்கு 25: டெல்லியில் சதிராடும் சர்வே முடிவுகள்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் வெளியாகிவரும் கருத்துக்கணிப்புகள் பாஜக, ஆம் ஆத்மி கட்சியினரை நகம் கடிக்க வைக்கின்றன.
பாஜகவிற்கு 45 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் இன்டியேட்டிவ் (ஆர் டி ஐ) கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
அதேசமயம் எகனாமிக்ஸ் டைம்ஸ் தனது சமீபத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 36 முதல் 40 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. பாஜக 28 முதல் 32 இடங்கள் வரை வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதில் ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். பாஜக சார்பில் கிரண் பேடி களம் இறக்கப்பட்டுள்ளார்.
டெல்லியின் முதல்வர் நாற்காலிக்கு ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிய கிரண்பேடியும், ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக பதவி வகித்த அர்விந்த் கெஜ்ரிவாலும் போட்டி போடுவது தேர்தலில் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இடங்களைப் பெற்று காங்கிரஸ் தயவில் முதல்வராக அமர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் 49 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். இது அவருக்கு கொஞ்சம் பலவீனம்தான் என்றாலும் இனி அவ்வாறு செய்யமாட்டேன். பிரதமருடன் இணைந்து செயல்படுவேன் என்று வாக்கு கேட்பது டெல்லிவாசிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் நாளுக்கு ஒரு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி மக்களிடையே சற்றே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை
ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் (ஆர்டிஐ) நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 41-45 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு 21-25 இடங்கள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் நான்கு இடங்கள் மட்டும்தான் கிடைக்குமாம். பாஜகவிற்கு 41 சதவிகித வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சிக்கு 36 சதவிகிதமும், காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
எகனாமிக்ஸ் டைம்ஸ்
டெல்லியில் ஆதரவு யாருக்கு என்பது பற்றி கடந்த நவம்பர் மாதம் மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவிற்கு 43-47 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 22-25 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்தது.
திசைமாறிய காற்று
ஆனால் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல்வர் வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு களமிறங்கிய பின்னர் காற்று சற்றே திசைமாறி வீசத்தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 28-32 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்று தெரியவந்துள்ளது. அதேசமயம் ஆம் ஆத்மி கட்சிக்கு 36-40 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரியவந்தது.
ஐயோ பாவம் காங்கிரஸ்
மூன்று முறை தொடர்ந்து டெல்லியை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மாற்றத்திக்கு காரணம்
நவம்பரில் இருந்த மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட மூன்று நிகழ்வுகளை காரணமாகக் கூறுகின்றனர் கர்வாப்ஸி எனப்படும் மதமாற்றம், உபேர் கால்டாக்ஸி பாலியல் பலாத்காரம், அமெரிக்க ஜனாதிபதியின் டெல்லி வருகை
களமிறக்கிய பாஜக
டிசம்பரில் இருந்த மக்களின் மனநிலை பாஜகவிற்கு எதிராக திரும்புவதை உணர்ந்த பாஜக கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக களம் இறக்கியது. ஆனாலும் இரும்பு பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட கிரண்பேடியால் மக்களைக் கவரும் வகையில் பேச முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.
அன்னா ஹசாரே பாசறை
கடந்த 2011ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராடியபோது அர்விந்த் கெஜ்ரிவாலும், கிரண்பேடியும் இணைந்து செயல்பட்டனர். பின்னர் விலகிய அர்விந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய கையோடு 2013 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அதே அன்னாஹசாரேவின் பாசறையில் இருந்து வந்த கிரண்பேடி பாஜகவின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
யாருக்கு ஆதரவு
முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 54 சதவிகித மக்கள் தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 42 சதவிகிதமாக இருந்த ஆதரவு தற்போது 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் கிரண்பேடிக்கு 38 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அஜய் மக்கானுக்கு 6 சதவிகித ஆதரவுதான் கிடைத்துள்ளது.
கருத்துக்கணிப்பு குழப்பமா?
ஏ.பி.பி நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 35 இடங்களும், பாஜகவிற்கு 29 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதுவா இல்லை அதுவா?
அதே சமயம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவிற்கு 27-32 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 36-41 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 2-7 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அட போங்கப்பா
என்.டி.டிவி, டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மிக்குத்தான் அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் தி வீக் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவிற்கு 36 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 29 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லெட்டர் போட்டு
உலகத்தரம் வாய்ந்த நகரமாக டெல்லி மாற்றப்படும் என்று கூறியுள்ள பாஜக ஒவ்வொரு வாக்காளருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது.
ஜெயித்தே ஆகவேண்டும்
பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரச்சாரம் செய்துள்ளார். மத்திய அமைச்சர்கள் பல மாநிலங்களைச்சேர்ந்த 120 எம்.பிக்கள் என ஒரு பட்டாளத்தையே டெல்லி தேர்தலுக்காக களமிறக்கியுள்ளது பாஜக.
பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே
நேர்மையான வெளிப்படையான ஆட்சி என்ற அஸ்திரத்துடன் களமிறங்கியுள்ள ஆம் ஆத்மியோ நகரம் முழுவதும் பாதுகாப்பிற்காக அதிகளவில் கேமரா வைக்கப்படும் என்று கூறி வாக்கு கேட்டுள்ளது.
அதெல்லாம் நம்பாதீங்க
ஆம் ஆத்மிக்கு வந்த கட்சி நிதியைப் பற்றி பேசிய முதல்வர் நேர்மையான ஊழலற்ற ஆட்சி என்று முழங்கியவர்களின் லட்சணம் இதுதான் என்று சாட்டை சுழற்றியுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி. அதே சமயம் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவிற்கு வாக்கு விழுகிறது என்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சோதனை பற்றி பீதி கிளப்பியுள்ளார் கெஜ்ரிவால்.
தலையெழுத்து எப்படியோ?
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 ஐ கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு பிரச்சாரத்தில் அனலை கிளப்பி முடித்துள்ளனர் வேட்பாளர்கள். இனிமேல் நடக்கப்போவது வாக்குச்சாவடிகளில் பட்டனை அழுத்தும் வாக்காளர்களின் கையில் உள்ளது.
ஐ.பி.எஸ் - ஐ.ஆர்.எஸ்
டெல்லியின் முதல்வர் நாற்காலியை இம்முறை அலங்கரிக்கப்போவது ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த கிரண்பேடியா? ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக இருந்த அர்விந்த் கெஜ்ரிவாலா? இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். டெல்லி மக்கள் யாரை முதல்வராக உட்கார வைக்க ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் இப்போதைக்கு அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.