29 முறை டெல்லி சென்றும் ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவில்லை.. சந்திரபாபு நாயுடு ஆவேசம்!
29 முறை டெல்லி சென்று வந்தும் ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவில்லை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
Recommended Video
குண்டூர்: 29 முறை டெல்லி சென்று வந்தும் ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவில்லை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், நடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது. ஆனால், இதுவரை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிகிறது.
பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை
அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் கூட ஆந்திராவுக்கு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அநீதி இழைத்துவிட்டதாக
இதனால் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி உடையலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ஆந்திராவுக்கு அநீதி இழைத்துவிட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
29 முறை சென்றும் பலனில்லை
மேலும் டெல்லிக்கு 29 முறை சென்றும் பலரை சந்தித்தும் எந்த பலனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் பட்ஜெட்டிலும் ஆந்திராவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
5 கோடி மக்களின் சார்பாக
ஆந்திர மாநிலத்துக்கு நன்மை கிடைக்கும் என்று எண்ணியே தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும் அவர் கூறினார். ஆந்திராவில் உள்ள 5 கோடி மக்களின் சார்பாக நீதி வேண்டி கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்.
விவாதிக்க தயார்
ஆந்திராவுக்கு மத்திய அரசு செய்துள்ள திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் மற்ற மாநிலங்கள் எவ்வளவு பெற்றுள்ளன, நாங்கள் எவ்வளவு பெற்றுள்ளோம் என்பது குறித்து விவாதிக்க தான் தயார் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.