டெல்லி வாக்காளர்களுக்கு ஐஸ் வைக்கவே பெட்ரோல் விலை குறைப்பு... ஆம் ஆத்மி, காங் குற்றச்சாட்டு
டெல்லி: டெல்லி வாக்காளர்களைக் கவர்வதற்காகவே, மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைத்துள்ளதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி சட்டசபைத் தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்தன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 25 காசுகளும் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில் இந்த விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது வாக்காளர்களைக் கவர்வதற்காகவே என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் தனது டூவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், "டெல்லியில் தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நான் கணித்தேன். இது கடைசி, நம்பிக்கையற்ற சூதாட்டம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனந்த் சர்மா, ‘இது வாக்காளர்களை கவருவதற்கான முயற்சியாகும்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில்,‘பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதன் மூலம் சாதாரண மனிதனுக்கு நிவாரணம் கொடுப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது' என்றார்.