பெட்ரோல் குண்டு வீச்சு - திருவனந்தபுரத்தில் பாஜக பந்த் - தமிழக பேருந்துகள் நிறுத்தம்
திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை 2 இளைஞர்கள் தாக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக கோஷமிட தொடங்கினர். 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒழிக', 'இந்து சேனா வாழ்க' என்று கோஷமிட்டனர்.
உடனே அங்கிருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள், அந்த இருவரையும் தடுத்து நிறுத்தி, அடி, உதை கொடுத்தனர். இதன்பிறகு அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும், கோட்டையத்திலும் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாஜக அலுவலகம் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
திருவனந்தபுரம் மட்டுமல்லாது கேரளாவில் மொத்தம் 4 இடங்களில் தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
பெட்ரோல் குண்டு வீச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருவனந்தபுரத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. காலை 6 மணி முதல் பந்த் தொடங்கியுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இருந்து தமிழக அரசு பேருந்துகள் கேரளாவுக்கு இயக்கப்படவில்லை. பாஜகவினரின் போராட்டம் காரணமாக தமிழக வாகனங்கள் கேரள எல்லையில் நிறுத்தப்படுகிறது.
குமரி வழியாக கேரளா செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தராஜன் கேரளாவில் பாஜக தொண்டர்கள் வன்முறைக்கு ஆளாவதாக கூறியுள்ளார்.
கேரள கம்யூனிஸ்ட் அரசு அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.