மோடியை முன்னிறுத்தியது பாஜகவின் தற்கொலை முடிவு... காங் கருத்து
டெல்லி: பிரதமர் பதவிக்கு வர துடியாத் துடிக்கிறார் நரேந்திர மோடி. அவரது கனவு நிச்சயம் நிறைவேறாது. மோடியை முன்னிறுத்தியதன் மூலம் தற்கொலை முடிவை எடுத்துதுள்ளது பாஜக என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
மோடியை தனது பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜகவே வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ஏளது.
பாஜகவின் இந்த முடிவு அரசியல் தற்கொலை என்று வர்ணித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான அனந்த சர்மா, வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களை மக்கள் நிராகரித்து விட்டதால் இப்போது மோடியைக் கொண்டு வந்துள்ளது பாஜக என்றும் கூறியுள்ளார்.
பிரிவினைவாத தலைவர்
சர்மா கூறுகையில், மோடி ஒரு பிரிவினைவாத தலைவர். பிரதமர் பதவிக்கு துடியாத் துடிக்கிறார். அவரது கனவு நிறைவேறாது.
அரசியல் தற்கொலை
மோடியை முன்னிறுத்தி அரசியல் தற்கொலைக்கு முயன்றுள்ளது பாஜக. வாஜ்பாய், அத்வானி ஆகியோரை ஏற்கனவே மக்கள் நிராகரித்து விட்டனர். அதனால் மோடியைக் கொண்டு வந்துள்ளனர். இவரையும் மக்கள் நிராகரிப்பார்கள்.
எல்லாமே தான்தான் என்ற நினைப்பு
மோடிக்கு எல்லாமே தான்தான் என்ற நினைப்பு அதிகம் உள்ளது. நான், நான், நான் என்றுதான் அவர் பேசுகிறார், செயல்படுகிறார்.
ஆனால் ராகுல் அப்படி இல்லை
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக துணைத் தலைவர் ராகுல் காந்தி அப்படி இல்லை. எந்த முடிவாக இருந்தாலும் எல்லோரையும் கேட்டே அவர் செய்கிறார், எடுக்கிறார். யாரையும் குற்றம் சாட்டிப் பேசுவதும் இல்லை. பழி வந்தாலும் தானே சுமக்கிறார்.
மக்கள் மோடியை ஏற்க மாட்டார்கள்
மக்கள் மோடியை தங்களது பிரதிநிதியாக ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். உண்மையான நாடாளுமன்ற ஜனநாயகவாதியாக ஒருபோதும் இவர் திகழ்ந்தது கிடையாது என்றார்.
வாஜ்பாய்க்கே அந்த நிலை
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், ஆறு ஆண்டுகளிலேயே வாஜ்பாயை மக்கள் நிராகரித்து விட்டனர். அத்வானிக்கு பிரதமர் பதவி கூட கிடைக்கவில்லை. அவரை வீட்டோடு உட்கார வைத்து விட்டனர். எனவே மோடிக்கும் இதே நிலைதான் வரும். 2014 தேர்தல் அதை நிரூபிக்கும் என்றார்.