கேரளா சட்டசபை தேர்தல்: திருவனந்தபுரத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அவுட்
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தோல்வியை தழுவியுள்ளார்.
கேரள சட்டசபையில் மொத்தம் 141 இடங்கள் உள்ளன. இதில் ஒரு உறுப்பினர், நியமனம் செய்யப்படுவார். எஞ்சிய 140 இடங்களுக்கும் மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் நடைபெற்றது.
140 தொகுதிகளிலும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 1,203 பேர் களத்தில் போட்டியிட்டார்கள். அவர்களில் 109 பேர் பெண்கள்.
பாஜக தனது வரலாற்றில் முதன் முறையாக கேரளாவில் இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரசின் ஐக்கிய முன்னணி ஆகியவற்றுக்கு மாற்றாக 3வது அணியாக தேர்தலில் களமிறங்கியது.
கேரள சட்டசபைத் தேர்தலில் பாஜக 97 தொகுதிகளில் போட்டியிட்டது. கேரள மாநிலத்தில் இதுவரை எந்தவொரு சட்டசபைத் தொகுதியிலோ அல்லது மக்களவை தொகுதியிலோ பாஜக வெற்றி பெற்றதில்லை. இருப்பினும், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் கிடைத்ததால், சட்டசபைத் தேர்தலை பாஜக நம்பிக்கையுடன் எதிர்கொண்டது.
மே 16ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன், மூத்த தலைவர்கள் ஓ.ராஜகோபால், வி.முரளிதரன், பி.கே.கிருஷ்ணதாஸ், பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோருக்கு இந்த முறை வெற்றி வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்பட்டது.
இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தோல்வியடைந்துள்ளார். அவர் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அந்தத் தொகுதியில் வி.எஸ். சிவகுமார் வென்றுள்ளார்.
2013 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். ஸ்ரீசாந்த், சவாண் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த தில்லி நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று இவர்கள் 3 பேர் உள்பட 36 பேரை விடுவித்தது. ஆனால், ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்களின் (ஸ்ரீசாந்த், அங்கித் சவாண் உள்ளிட்டோர்) ஆயுள்காலத் தடை தொடரும் என்று பிசிசிஐ அறிவித்தது.
குற்ற நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை இரண்டும் வெவ்வேறானவை. சம்பந்தப்பட்ட வீரர்களின் ஒழுங்கீனச் செயல்கள் குறித்து ஊழல் தடுப்புக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆயுள்காலத் தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று பிசிசிஐ விளக்கம் அளித்தது.
அதே நேரத்தில் நேமம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வி. சிவன்குட்டியை எதிர்த்து பாஜக மூத்த தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால் போட்டியிட்டார். சிவன்குட்டியை 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார் ஓ ராஜகோபால். இதன் மூலம் கேரள சட்டசபைக்கு செல்லும் முதல் பாஜக எம்.எல்.ஏ. என்ற பெருமையை பெற்றுள்ளார் ராஜகோபால்.