கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்... காலம் கடந்து மூத்த தலைவர்களின் ஆலோசனைகள ஏற்கத் தயாராகும் பாஜக!
டெல்லி: பீகார் தோல்வியைத் தொடர்ந்து தங்கள் கட்சியின் மூத்தத் தலைவர்கள் தரும் ஆலோசனைகளை ஏற்க தயாராக உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படு தோல்வி அடைந்தது. இந்தக் கூட்டணியால் வெறும் 58 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது, பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே, அடுத்து வரும் மற்ற மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்த அச்சம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பாஜகவின் நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களே விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூத்தத் தலைவர்கள் குற்றச்சாட்டு...
டெல்லி சட்டசபை தேர்தலில் கிடைத்த தோல்வியிலிருந்து பாடம் கற்காததால் தான் பீகார் தேர்தலில் தோல்வி கிடைத்துள்ளதாக பாஜக மூத்தத்தலைவர்களான அத்வானி, முரளி மனோகர்ஜோஷி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பலவீனமடைந்து வரும் பாஜக....
இது தொடர்பாக பாஜக மூத்தத் தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, சாந்தகுமார் ஆகியோர் சேர்ந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ‘கடந்த ஓராண்டாக கட்சி பலவீனம் அடைந்து வருகிறது. இதற்கு அனைவரும் பொறுப்பேற்பதாக கூறுவதை ஏற்க முடியாது. பீகார் தேர்தலில் ஒருமித்த கருத்துடைய கட்சித் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்' என குற்றம் சாட்டியிருந்தனர்.
கவலை...
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்காரி, வெங்கையாநாயுடு ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘கட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டிலிருந்து மீண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து கட்சி தலைவர்கள் கவலை கொண்டுள்ளனர். டெல்லி மற்றும் பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் கவலையளிக்கிறது.
மூத்த தலைவர்களின் ஆலோசனைகள்...
பாஜக மூத்த தலைவர்கள் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படும். மூத்த தலைவர்கள் தரும் ஆலோசனைகளை ஏற்க தயாராக உள்ளோம். மற்ற மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வெற்றி பெறுவோம். மூத்த தலைவர்கள் ஆரோக்கியமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி தந்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளனர்.
புறக்கணிக்கப்படும் அத்வானி...
ஆனால், காலம் கடந்து பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது என்றே கூறவேண்டும். சமீபகாலமாகவே பாஜகவில் மூத்தத்தலைவர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூருவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான அத்வானிக்கு பேச வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. பாஜகவில் 38 ஆண்டுகால வரலாற்றில் அதன் செயற்குழு கூட்டத்தில் அத்வானி பேசாதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓரம் கட்டப்பட்டார்...
இதேபோல், டெல்லியில் கொண்டாடப்பட்ட பாஜக உதயமான தின விழாவிற்கும் அத்வானிக்கு முறைப்படி அழைப்பு விடப்படவில்லை. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் ஒன்று சேர்ந்து அத்வானியை ஓரம் கட்டிவிட்டதாகக் கூறப்பட்டு வந்தது.
தொடர் தோல்வி...
இந்நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தல், பீகார் தேர்தல் என அடுத்தடுத்து படுதோல்வியைச் சந்தித்து வருகிறது பாஜக. எனவே, இது விழித்துக் கொள்ள வேண்டிய காலம் என்பதை அக்கட்சியின் தலைவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
ஆலோசனை...
அதன் எதிரொலியாகவே பாஜக மூத்த தலைவர்கள் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படும். மூத்த தலைவர்கள் தரும் ஆலோசனைகளை ஏற்க தயாராக உள்ளோம் என ராஜ்நாத் சிங், கட்காரி, வெங்கையாநாயுடு ஆகியோர் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.