பட்ஜெட்டில் விவசாயி, விவசாயம் என்ற வார்த்தையை ஜேட்லி அடிக்கடி பயன்படுத்தியது இதுக்குத் தானாமே!
குஜராத் தேர்தலில் விவசாயிகளின் அதிருப்தி அதிக அளவில் இருந்ததால் பட்ஜெட்டை விவசாயிகள், விவசாயத்திற்கான பட்ஜெட்டாக காண்பிக்க நிதியமைச்சர் முயன்றுள்ளது அவரது பட்ஜெட் உரையில் தெரிந்தது.
Recommended Video
டெல்லி : குஜராத் தேர்தலில் விவசாயிகளின் அதிருப்தி அதிக அளவில் இருந்ததால் இந்த பட்ஜெட்டை விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கான பட்ஜெட்டாக காட்ட மத்திய அரசு முயற்சித்துள்ளது. இதன் விளைவாகவே நிதியமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய உரையில் 22 முறை விவசாயி என்ற வார்த்தையையும், 15 முறை விவசாயம் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதோடு சிறு, குறு, தொழில்நிறுவனங்கள், உலக அளவிலான சுகாதாரத் திட்டம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அறிவிப்புகளும் ஏழை மக்களை கவர்வதற்காகவே என்றும் கூறப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் ஏழை மற்றும் விவசாயிகளுக்கான பட்ஜெட் என்று பாஜக அரசு கூறுகிறது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் அந்த மாநிலத்தில் பாஜக சந்தித்தது விவசாயிகள் இடையேயான அதிருப்தி, விவசாயிகள் மத்தியில் பாஜக அரசு பற்றி நிலவும் கருத்தை மாற்றவே பட்ஜெட்டை ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கான பட்ஜெட்டாக வெளிக்காட்ட அரசு முயற்சிக்கிறத.
அருண்ஜேட்லியின் பட்ஜெட் உரையில் 22 முறை விவசாயி என்ற வார்த்தையையும், 15 முறை விவசாயம் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியதே இதற்கு சான்றாக சொல்லப்படுகிறது. இதேபோன்று பட்ஜெட் உரையில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உலக அளவிலான சுகாதார திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வார்த்தைகளும் திட்டங்களும் இடம்பெற்றது.
ஏழைகளின் நண்பனாக காட்ட முயற்சி
ஜேட்லி பட்ஜெட்டின் முதல் பாதியை படித்து முடிந்த போதே பட்ஜெட்டை ஏழைகளுக்கானதாக காண்பிக்க அரசு முயற்சிப்பதை எதிர்க்கட்சியினர் உணர்ந்தனர். கர்நாடகா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தலும், 2019ல் பொதுத் தேர்தலும் வரவுள்ள நிலையில் தாங்கள் ஏழைகளின் நண்பன் என்ற கோஷத்தை முன் எடுக்கும் விதமாக இந்த பட்ஜெட்டை வெளிக்காட்ட பாஜக முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
விவசாயிகளுக்கானது என அமித்ஷா கருத்து
அதற்கு ஏற்றாற் போல பட்ஜெட்டில் ஏழைகள், விவசாயிகள், நடுத்தர மக்களுக்கு ஊக்கமளிக்கும் விஷயங்கள் இருப்பதாக பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். புதிய இந்தியா பட்ஜெட் அனைத்துத் துறையையும் மேம்படுத்தும் என்றும் கிராமப்புற மற்றும் விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாய மேம்பாட்டிற்கு வழி வகுக்கும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டள்ளார்.
மோடி அரசு விவசாயிகளுக்கானது
விவசாயிகளை புறக்கணித்து அவர்களின் வெறுப்பை சம்பாதிக்க பாஜக விரும்பவில்லை என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் சுட்டிக் காட்டியுள்ளார். மோடி அரசு விவசாயிகள் நலனுக்கானது என்பதை உணர்த்தும் விதமாக விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்டும் வகையிலான உறுதிகளை ஜேட்லி அளித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிடுகிறார். விவசாயி தங்களது நிலத்தில் குறைந்த முதலீட்டில் பொருட்களை உற்பத்தி செய்து பொருட்களுக்கு அதிக லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதே எங்கள் அரசின் திட்டம். உழவு சார்ந்த மற்றும் சாராத விவசாயிகள் மற்றும் நிலமற்ற குடும்பத்தினரும் லாபம் பெற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என்றும் பாஜக மூத்த தலைவர் தெரிவத்துள்ளார்.
பெங்களூருக்கு புறநகர் ரயில் சேவை
கர்நாடகா சட்டசபை தேர்தலை மனதில் வைத்து 160 கிலோமீட்டடிரில் ரூ. 17 ஆயிரம் கோடி செலவில் புறநகர் ரயில் சேவை திட்டத்தை அருண்ஜேட்லி அறிவித்துள்ளார். 2014 தேர்தல் வாக்குறுதியில் அளித்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பது பாஜக மீது வைக்கப்படும் விமர்சனம், எனவே வேலைவாய்ப்பு சார்ந்த அறிவிப்பிலும் ஜேட்லியின் கவனம் சென்றிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசப்படும்
10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, மருத்துவ செலவுக்காக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான அம்சமாக இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மற்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் போல, 0.1 சதவீதம் நீங்கள் செலுத்தினால் போதும் 40 சதவீத சுகாதார பாதுகாப்பு கிடைக்கும், இதே சமயம் இது உலக அளவிலான சுகாதார திட்டமாகவும் பார்க்கப்படும் என்பது தான் அரசின் திட்டமாம்.