பாஜக வேண்டுமென்றே என் தந்தையை துன்புறுத்துகிறது : லாலுபிரசாத் மகன் தேஜஸ்வினி யாதவ் கண்ணீர்
பாஜக வேண்டுமென்றே என் தந்தையை துன்புறுத்துகிறது என்று அவரது மகன் கண்ணீர் தேஜஸ்வினி யாதவ் மல்க தெரிவித்து உள்ளார்.
ராஞ்சி : தனது தந்தை லாலு பிரசாத் யாதவை வேண்டுமென்றே சிறையில் அடைத்து பாஜக துன்புறுத்துவதாக அவரது மகன் தேஜஸ்வினி யாதவ் கண்ணீருடன் தெரிவித்து உள்ளார்.
மாட்டு தீவன ஊழல் வழக்கில் பீகாரின் ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என ஜார்கண்ட் சிபிஐ நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்து உள்ளது. இதனையடுத்து அவர் ராஞ்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றத்திற்கான தண்டனை விபரம் வருகிற ஜனவரி மூன்றாம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வினி யாதவ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது எனது தந்தையை பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு துன்புறுத்தி வருகிறது என்றும், இதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பாஜக கேட்டுக்கொண்ட போதே எனது தந்தை மட்டும் அவர்களுடன் கைகோர்த்து இருந்தால் அவரை அரிச்சந்திரனாக கருதி இருப்பார்கள் அவருக்கு இந்நேரம் விடுதலை கிடைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், நிதிஷ்குமார் போல எனது தந்தை காட்டிக்கொடுக்கும் நபர் அல்ல. இதனால் தான் அவரை எதிரியாக நினைக்கிறார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருக்கு இடையூறு கொடுத்துவிட்டால் அந்த கட்சியை ஒழித்துவிடலாம் என்று சிலர் தப்பு கணக்கு போட்டு இருக்கிறார்கள். அவர்களின் கணக்கு தவறு என்பது பின்னர் தெரியவரும். பீகார் மக்கள் அவர்களுக்கு வலுவான பாடம் புகட்டுவார்கள்.
லாலுபிரசாத்தை யார் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தார்களோ, அவர்கள் விரைவில் அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். லாலு பிரசாத் மீதான தீர்ப்பை எதிர்த்து ராஞ்சி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.
எங்கள் குடும்பத்தின் மீது தொடர்பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நீதிமன்றத்தின் மூலம் நிச்சயம் நீதியை பெறுவோம். ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக லாலுபிரசாத்தை சி.பி.ஐ. ஜெயிலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதில் எங்களுக்கு நீதி கிடைத்தது. அதேபோல இந்த வழக்கிலும் நீதியை பெறுவோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.