கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு ஆபத்து? 'ஆபரேஷன் கமலா'வை கையில் எடுத்த பாஜக!
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் 'ஆபரேஷன் கமலா' எனப்படும் எம்எல்ஏக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் செயலில் பாஜக இறங்கியுள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடகாவில் இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவானது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை.
பாஜக 104, காங்கிரஸ் 78 மற்றும் மஜத 37 தொகுதிகளை வெற்றி பெற்றது.
பெரும்பான்மை
இதையடுத்து பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்தார். எடியூரப்பா முதல்வரானார். ஆனால், எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்பதால் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூட்டப்பட்ட சட்டசபையில் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ், மஜத கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன. மஜதவின் குமாரசாமி முதல்வராக உள்ளார்.
ஆட்சியை கலைக்க முயற்சி
இந்த நிலையில், கூட்டணி ஆட்சியை கலைத்து, பாஜக ஆட்சியமைக்க முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மஜத தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான, சா.ரா.மகேஷ் கூறுகையில், 2008ம் ஆண்டு ஆபரேஷன் கமலா என்ற பெயரில், மெஜாரிட்டிக்கு குறைவாக இருந்த 3 எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியமைத்தது பாஜக. அதேபோல இப்போதும் ஆபரேஷன் கமலாவை ஆரம்பித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
சும்மா இருக்காது
கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், பாஜக தனது வேலையை காட்டினால், காங்கிரஸ் சும்மா இருக்காது. பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் எங்களோடும், 5 எம்எல்ஏக்கள் மஜதவுடனும் தொடர்பில் இருக்கிறார்கள். பாஜகவை உடைக்க நாங்கள் தயங்க மாட்டோம் என எச்சரித்தார்.
மறுப்பு
பாஜக இணை செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் கூறுகையில், "தினேஷ் குண்டுராவ் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை பாஜக மீது சுமத்துகிறார். பாஜகவில் எந்த தலைவர் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஈர்க்க முயன்றார் என தினேஷ் குண்டுராவ் பெயரை வெளியிட தயாரா" என சவால் விடுத்தார்.
நடந்தது இதுதான்
எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்று, பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை கூட்டுவதற்கு முன்பாக, காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை அக்கட்சிகள் ரிசார்ட்டுகளில் தங்க வைத்தன. இருப்பினும் அவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு, கோடிக்கணக்கான பணம் தருவதாக பாஜக தலைவர்கள் பேசியதாக காங்., மஜத தரப்பில் ஆடியோ ரிலீஸ் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், ரிசார்ட்டுகளில் எம்எல்ஏக்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு, எடியூரப்பா அரசு கலைந்தது குறிப்பிடத்தக்கது.