மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி பாஜக தேர்தலில் வெற்றி பெறப்பார்க்கிறது : லாலு காட்டம்
பொதுமக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி பாஜக தேர்தலில் வெற்றி பெறப்பார்க்கிறது என்று லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பாட்னா : நாடு முழுவதும் பொதுமக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி பாஜக தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ் அறிக்கையில் சாடியுள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் , ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பல்வேறு உடல்நலக்கோளாறுகள் கொண்ட லாலுவின் உடல்நிலை கடந்த வாரம் மோசமானதை அடுத்து, அவர் தற்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமமையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது கட்சியின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.
அந்தக்கூட்டத்தில் கட்சியினருக்கு லாலுபிரசாத் யாதவ் எழுதியிருந்த அறிக்கை படிக்கப்பட்டது. அதில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தலித் மக்கள் அனைவருக்கும் எதிரான வன்முறையைத் தூண்டி விடுகிறது.
நாடு முழுவதும் மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என்கிற எண்ணத்தில் இதை அவர்கள் செய்து வருகிறார்கள். இதுமிகவும் கண்டிக்கத்தக்கது.
பீகார் மாநிலத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி நிலை நிலவுகிறது. இது மிகவும் ஆபத்தானது. மக்கள் அனைவரும் மாற்றத்தையே விரும்புகிறார்கள். விரைவில் அவர்கள் எதிர்பார்த்த மாற்ற நிகழும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.