நாங்க கொண்டு வந்தது "ஆதார்" .. ஆனால் பாஜக எதுக்குப் பயன்படுத்துது பாருங்க. போட்டுத் தாக்கும் ராகுல்
காங்கிரஸ் கொண்டு வந்த எளிய ஆதார் திட்டத்தை மக்களைக் கண்காணிப்பதற்காக பாஜக பயன்படுத்துகிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
பெங்களூரு : மக்களின் சிரமங்களை எளிதாக்க காங்கிரஸ் கொண்டு வந்த ஆதார் திட்டத்தை, மக்களைக் கண்காணிப்பதற்காக பாஜக பயன்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் வருகிற 12ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பிரசாரங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பெங்களூருவில் தனது இறுதிகட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய பிரசாரத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், விவசாயிகள் மற்றும் சிறு தொழில் செய்வோரின் கடனை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், மோடி அரசோ பெரும் தொழிலதிபர்கள் தரவேண்டிய 2 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது.
விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வது தவறான செயல் என்றும் மோடி ஆட்சியில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். நாட்டின் வங்கிகளில் இருக்கும் 90% மக்கள் பணம், 15 பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே செல்கிறது.
பாஜகவின் எடியூரப்பா மற்றும் ரெட்டி சகோதரர்களை அருகில் வைத்துக்கொண்டே ஊழல் ஒழிப்பு பற்றி மோடி பேசுவது விசித்திரமாக உள்ளது. மோடியின் நண்பர்கள் வங்கிகள் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள். ஆனால், மோடி அதைப்பற்றி எல்லாம் பேசத்தயாராக இல்லை.
சித்தராமையா, மல்லிகார்ஜுனே கார்கே ஆகிய தலைவர்களை பற்றி மோடி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது பிரதமர் பதவிக்கு அழகல்ல. அதை மோடி மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்.
மக்களின் வாழ்க்கையை எளிதாக்க காங்கிரஸ் கொண்டுவந்த ஆதார் திட்டத்தை, மக்களை கண்காணிப்பதற்காக பாஜக பயன்படுத்துகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய ஆதார் திட்டத்தை நீக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.