இங்கிட்டு திட்டு- அங்கிட்டு ஓட்டுக்காக பிரிவினைவாதிகள், மிஷினரிகள், முஸ்லிம்களுடன் கைகோர்க்கும் பாஜக
வாக்கு அரசியலுக்காக யாரையெல்லாம் விமர்சித்ததோ பாஜக அவர்கள் அனைவருடனும் கை கோர்த்து கொள்கிறது பாஜக.
டெல்லி: பாஜக எப்போதும் கிறிஸ்தவ மிஷனரிகள், பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள், முஸ்லிம்களை வசைபாடுவது வழக்கம். ஆனால் ஓட்டு அரசியல் என்று வரும்போது கூச்ச நாச்சமே இல்லாமல் இதே சக்திகளுடன் கை கோர்த்துக் கொள்கிறது பாஜக.
மதச்சார்பின்மை என்பது போலியானது; கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிரிவினைவாதிகளை மென்மையாக அணுகும் தன்மை கொண்டது என்பதுதான் பாஜகவின் விமர்சனம். தமிழகத்திலும் திராவிடம்- ஆரியம் என்பதே கிறிஸ்தவ மிஷனரிகளின் கருத்து என இடைவிடாது விமர்சிக்கிறது பாஜக.
தற்போது மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திரிபுரா மாநிலத்தில் பாஜக யாருடனெல்லாம் கூட்டணி வைத்திருக்கிறது பாருங்கள். பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சி Indigenous People's Front of Tripura (IPFT). திரிபுராவில் பழங்குடி இனமக்களை உள்ளடக்கி தனி மாநிலம் கோருகிற வலிமையான அமைப்பு இது. அண்மையில் தனிமாநிலம் கோரி உக்கிரமான போராட்டங்களை நடத்தி இயல்பு வாழ்க்கையை நாசமாக்கியது இந்த அமைப்பு.
மிஷனரிகளுடன் கை கோர்ப்பு
கிறிஸ்தவ மிஷனரிகளே கூடாது என விமர்சிக்கும் பாஜக மேகாலயாவிலும் நாகாலாந்திலும் அந்த மிஷனரிகளால்தான் காலூன்றிக் கொண்டிருக்கிறது. மேகாலயாவில் கிறிஸ்தவர்கள்தான் பெரும்பான்மை. இதனால் தேவாலயங்களை மேம்படுத்துவதற்காக சுற்றுலா மேம்பாட்டின் கீழ் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கொடுத்தது மத்திய பாஜக அரசு. அதுவும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்... கிறிஸ்தவ மிஷனரிகளின் தயவு இல்லாமல் மேகாலயாவில் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தே இந்த அறிவிப்பை வெளியிட்டது பாஜக.
சர்ச்சுகளில் பாஜக
நாகாலாந்திலும் கூட சர்ச்சுகளின் வாகனங்களில் பட்டொளி வீசி பறக்கிறது பாஜக கொடிதான். நாகாலாந்து தனிநாடு விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் வரை சட்டசபை தேர்தலே கூடாது என்பது நாகா பழங்குடி மக்களின் கோரிக்கை.
முழக்கம் இல்லையே...
இந்த கோரிக்கை தேசவிரோதமானது; தேசத்துக்கே ஆபத்தானது என எந்த முழக்கமும் பாஜகவிடம் இருந்து வரவில்லை. மாறாக நாகா மக்களுடன் இணைந்து கொண்டு தேர்தலை புறக்கணிப்போம் என பாஜகவும் அறிவிக்கிறது.
மஜ்லிஸ் கட்சியுடன் கூட்டணி
இதேபோல் கர்நாடகாவில் முஸ்லிம்களின் மஜ்லிஸ் கட்சியுடன் ரகசிய கூட்டணி. முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸுக்கு போவதைத் தடுக்க இப்படி ஒரு கூட்டணி. உத்தரப்பிரதேசத்தில் இதே பாணியில்தான் மஜ்லிஸ் கட்சியை களமிறக்கியது பாஜக.
திராவிட வேஷம்
இவ்வளவு ஏன்? இப்போது தமிழகத்தில் நாங்களும் திராவிடர்கள்; எங்க கட்சியும் திராவிட கட்சியும்தான் என வாய்கூசாமல் பேசுகிறது பாஜக. ஓட்டு அரசியலுக்காக சகலவித பித்தலாட்டங்களையும் கையிலெடுக்கும் பாஜக என்பதை அதன் ஒவ்வொரு முடிவுகளும் பட்டவர்த்தனமானவே அம்பலப்படுத்தியுள்ளன.