கர்நாடக சட்டசபைத் தேர்தல்: பெங்களூருவில் குடியேறினார் அமித் ஷா- ஆட்சியை கைப்பற்ற தீவிர பிரச்சாரம்
கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்காக பெங்களூருவில் பாஜக தலைவர் அமித் ஷா குடியேறியுள்ளார்.
பெங்களூரு : கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிடவும், தேர்தலில் வெற்றி பெறவும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா பெங்களூருவில் குடியேறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தல் வருகிற மே 12ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
இதற்காக பாஜக தலைவர் அமித் ஷா பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற பல்வேறு கட்டங்களாக நடந்த பிரசாரத்தில் கலந்து கொண்ட அவர், பெங்களூருவில் குடியேற திட்டமிட்டார்.
இதனையடுத்து கர்நாடக மாநில பாஜக தலைவர்களுள் ஒருவரான அசோக், அமித் ஷாவிற்கு வீடு தேடியதை அடுத்து, பெங்களூர் சாளுக்கியா சதுக்கம் பகுதியில் உள்ள பீல்ட் லே அவுட்டில் ஒரு வீட்டில் அமித் ஷா நேற்று குடியேறினார்.
6 படுக்கை அறைகள் உட்பட 12 அறைகள் கொண்ட இந்த வீடு, 2 அடுக்குகளைக் கொண்டது. தேர்தல் முடியும் வரை இந்த வீட்டில் அமித் ஷா வசிப்பார் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜைகள் முடிந்து வீட்டிற்கு வந்த அமித் ஷா, பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, மூத்த தலைவர்கள் அசோக், ஈஸ்வரப்பா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.