பீகார் பா.ஜ.க.வில் பஞ்சாயத்து.. கட்சிப் பதவிகளில் இருந்து மூத்த தலைவர் சந்திரமோகன் ராய் ராஜினாமா
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சந்திரமோகன் ராய் திடீரென கட்சிப் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்திருப்பது சலசலப்பை கிளப்பியுள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தலித் கட்சிகளான லோக் ஜனசக்தி, அவாமி மோர்ச்சா ஆகியவை இணைந்துள்ளன. இவற்றுடன் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியும் கை கோர்த்துள்ளது.
இம்முறை எப்படியும் பீகாரில் ஆட்சியை கைப்பற்றிவிடுவது என்ற கங்கணத்துடன் கோதாவில் குதித்துள்ளது பா.ஜ.க. இருப்பினும் கட்சிக்குள் வெட்டுகுத்து வெடிக்கத் தொடங்கியுள்ளது டெல்லி மேலிடத்தை அதிர வைத்துள்ளது.
தற்போது பீகார் பா.ஜ.க.வின் அனைத்து கட்சி பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக மூத்த தலைவர் சந்திரமோகன் ராய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன் பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக கருதப்படும் சுஷில் குமார் மோடி பற்றியும் பகீர் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
இது குறித்து சந்திரமோகன் ராய் கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க நடந்த முயற்சிகளை மிகக் கடுமையாக எதிர்த்தவர்தான் சுஷில்குமார் மோடி... அத்துடன் 2012ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக 3வது முறையாக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது நிதிஷ்குமாருக்கு பயந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தவரும் சுஷில்குமார் மோடிதான்..
இவற்றையெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி இப்போது மறந்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.. என்னை முதல்வர் வேட்பாளராக்கவும் நான் கேட்கவில்லை.. என் மகனுக்கு சீட் கொடுக்கவில்லை என்ற கோபமும் எனக்கு இல்லை என்றார்.