குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரியில் அமல்... பாஜக தலைவர் அதிரடி பேச்சு!
கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) வரும் ஜனவரி முதல் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஏராளமான அகதிகளுக்கு குடியுரிமை வழங்க அரசு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்காள மக்களை முட்டாளாக்க பாஜக முயற்சிக்கிறது என குற்றம்சாட்டியது.
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் கடும் போராட்டங்கள் நடைபெற்றன.இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அமல்படுத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அண்டை நாடுகளிலிருந்து நமது நாட்டிற்கு வரும் துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நேர்மையான நோக்கத்துடன் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) அரசு, அதிகளுக்கு அனுதாபம் காட்டவில்லை. ஆனால் மத்திய அரசும், பாஜகவும் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது.
பிற மாநில விவசாயிகள் ம.பி.யில் வேளாண் பொருட்களை விற்றால் சிறை.. பாஜக முதல்வர் வார்னிங்
இதற்கு டி.எம்.சி மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஃபிர்ஹாத் ஹக்கீம் பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், குடியுரிமை என்பதற்கு பாஜக கூறும் அர்த்தம் என்ன ? மாதுவாக்கள்(மேற்கு வங்க அகதிகள்) குடிமக்கள் இல்லையென்றால், அவர்கள் ஆண்டுதோறும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் எவ்வாறு வாக்களித்தனர்? மேற்கு வங்காள மக்களை முட்டாளாக்குவதை பாஜக நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.