''இந்த அட்மின்கள் தொல்லை தாங்க முடியலப்பா!''
டெல்லி: முன்னாள் பாஜக எம்பி தருண் விஜய், மோடியை விமர்சித்தும் ராகுலை பாராட்டியும் போட்ட டுவீட்டை டெலிட் செய்துவிட்டு அந்த டுவீட்டை அட்மின்தான் போட்டார் என பழியை கழித்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மானசரோவர் யாத்திரை சென்றிருந்தார். அப்போது அவர் மானசரோவர் ஏரியின் தண்ணீர் மிகவும் அமைதியாகவும் சாந்தமாகவும் உள்ளது. இந்த தண்ணீரை யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். இதில் விருப்பு வெறுப்பு ஏதும் இல்லை. இதனால் தான் இந்தியாவில் உள்ள நாம் நீரை வழிபடுகிறோம் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து ஹனிமூன் செல்வது போல் ராகுல் சுற்றுலா சென்றுள்ளார் என்றும் சீன செய்தித் தொடர்பாளர் போல் பேசி வருகிறார் என்றும் பாஜக விமர்சித்தது. இந்நிலையில் ராகுலின் மானசரோவர் பயணத்தை பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் விமர்சித்துள்ளார்.
|
3 முறை சென்றுள்ளேன்
இந்நிலையில் பாஜக எம்பி தருண் விஜய் நேற்று முன் தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் கைலாஷ் யாத்திரை குறித்து மோசமான கருத்தை கூறுவது தவறு. இது ராகுலுக்கும் சிவனுக்கும் இடையானது. சிவனை விட பெரியோர் யாரும் இல்லை. கைலாஷ் யாத்திரைக்கு நான் 3 முறை சென்ற பாக்கியம் பெற்றுள்ளேன் என்று டுவீட் போட்டார்.
டுவிட்டர் கணக்கின் பெயர்
இதையடுத்து அமித்ஷாவை விமர்சிக்கும் வகையில் நீங்கள் ஒன்றும் அந்தளவுக்கு பெரிய ஆள் இல்லை. நீங்கள் இங்கு இருப்பதே மோடி அவர்களால்தான். வெறுப்பை நிறுத்துங்கள்... நீங்கள் பிரபலமானவரா அய்யோ அய்யோ என்று மீண்டும் ஒரு டுவீட் போட்டார். இதில் நரேந்திரமோடியின் டுவிட்டர் கணக்கின் பெயர் தவறாக குறிப்பிட்டிருந்தது.
|
நீக்கிவிட்டேன்
இதை கண்ட பாஜகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அந்த டுவீட்டுகளை டெலிட் செய்துவிட்டார் தருண் விஜய். எனினும் சிலர் இந்த டுவீட்டுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு பரப்பியதால் மிகவும் வைரலானது. இதையடுத்து அன்றிரவு 12 மணிக்கு அவர் வெளியிட்ட பதிவில் நான் காலை நடைப்பயிற்சியில் உள்ளேன். நான் நன்றாக உள்ளேன். என் டுவிட்டர் பக்கத்தை தவறாக பயன்படுத்தியவரை நீக்கிவிட்டேன் என்று அட்மின் மீது பழி போடுவது போல் ஒரு பதிவை போட்டார்.
|
புகார்
இதைத் தொடர்ந்து மீண்டும் நேற்று காலை 8 மணிக்கு ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில் தவறாக போடப்பட்டுள்ள டுவீட்டுகள் நான்தான் போட்டேன் என நம்பாமல் இருந்த நண்பர்களுக்கு நன்றி. நான் வீட்டை மாற்றும்போது எனது டுவிட்டர் கடவுச்சொல் தவறாக பயன்படுத்தப்பட்டுவிட்டது. தற்போது அதை மாற்றிவிட்டேன். போலீஸில் புகார் கொடுத்துள்ளேன் என போட்டிருந்தார்.
பல்டி அடித்த ராஜா
இதேபோல் திரிபுராவில் உள்ள பெரியார் சிலை அகற்றப்பட்டபோது எச் ராஜா போட்ட ஒரு டுவீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமியின் சிலை என்று குறிப்பிட்டிருந்தார்.
அட்மின்
இந்த டுவீட்டால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் இது அட்மின் போட்ட டுவீட் என்றும் அவரை நீக்கிவிட்டேன் என்றும் பதிவு செய்திருந்தார். இவரை போல் தருண் விஜய்யும் தற்போது அட்மின் மீது பழி போட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த அட்மின்களின் தொல்லை தாங்க முடியலப்பா என்கிறார்கள். மேலும் நள்ளிரவு 12.00 மணிக்கு யாரேனும் நடைப்பயிற்சி மேற்கொள்வரா என்றும் தருண் விஜயிடம் கேட்டுள்ளனர்.