காங்கிரஸ்காரர் தரூரை சந்தித்து பேசிய பாஜக எம்.பி. வருண் காந்தி
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை பாஜக எம்.பி. வருண் காந்தி சந்தித்து பேசியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடம் அவரது மனைவி சுனந்தா புஷ்கரின் கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள தரூரின் வீட்டுக்கு புதன்கிழமை மாலை பாஜக எம்.பி. வருண் காந்தி சென்றார். அங்கு அவர் சசி தரூரை சந்தித்து பேசினார்.
இந்த திடீர் சந்திப்பு பற்றிய பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு வருண் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார். இந்நிலையில் இது குறித்து வருண் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அடுத்த கூட்டத் தொடருக்கு வெளியுறவுத் துறை விவாகர கமிட்டி விவகாரம் தொடர்பாக தரூரை சந்தித்து பேசுமாறு என்னிடம் கூறப்பட்டது. அங்கு பத்து நிமிடங்கள் இருந்துவிட்டு கிளம்பிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறுகையில்,
லோக்சபாவின் வெளியுறவுத் துறை விவாகர கமிட்டி சந்திப்பு என்று பொய்யாக கூறி தரூர் வருணை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவரது வீட்டிற்கு வேறு யாரும் வராததால் நான் கிளம்பிவிட்டேன் என வருண் என்னிடம் தெரிவித்தார் என்றார்.