அதெப்படி மோடியை விமர்சிக்கலாம்? அருண்ஷோரி மீது பா.ஜ.க. பாய்ச்சல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரி விமர்சித்ததற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார கொள்கைகள் இலக்கே இல்லாதவை; செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெறவே பிரதமர் மோடி விரும்புகிறார்.. ஒரு மாநிலத்தின் முதல்வரைப் போல செயல்படுகிறார்; மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் அச்சத்துடன் இருக்கின்றனர் என்று மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் அருண்ஷோரி.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்த அருண்ஷோரியின் இந்த கடுமையான விமர்சனம் பாரதிய ஜனதா தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், சில தனிநபர்களுக்கு பதவி கிடைக்காத மனக்குறை இருக்கலாம்.. அதனால் தேவையில்லாதவற்றை பிரச்சனையாக்க முயற்சிக்கிறார்கள்.. நாடு தற்போது மிகச் சரியான பிரதமரின் கீழ் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார்.
அருண்ஷோரியின் விமர்சனத்தை கையில் எடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியோ, பாரதிய ஜனதா கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.