குஜராத் பிரச்சாரத்தில் மக்களோடு டீ குடித்துக்கொண்டே மோடியின் ‘மான் கீ பாத்’ கேட்ட பா.ஜ.க தலைவர்கள்
பிரதமரின் 'மான் கீ பாத்’ நிகழ்ச்சியை குஜராத்தில் டீ குடித்துக்கொண்டே பா.ஜ.க தலைவர்கள் கேட்டுள்ளனர்.
அகமதாபாத் : குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு அங்கமாகவும், மோடி மீதான காங்கிரஸின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும் பா.ஜ.க தலைவர்கள் வித்தியாசமான முறையைக் கையாண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை டீ விற்பவர் என்கிற விமர்சனத்தோடு கேலி செய்யும் வகையில் மீம் ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த கண்டனம் எழுந்தது. இதனால் அந்த மீம் நீக்கப்பட்டதோடு, மன்னிப்பும் கோரப்பட்டது.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று குஜராத் பிரச்சாரத்தில் வித்தியாசமான முறையை பா.ஜ.க.,வினர் கையாண்டனர். மாதம் தோறும் மோடி மக்களிடையே ரேடியோவில் பேசும் நிகழ்ச்சியான 'மான் கீ பாத்' ஒளிபரப்பானது. இதனை மக்களோடு மக்களாக டீ கடையில் அமர்ந்து டீ குடித்தபடியே பா.ஜ.க.,வின் முக்கியத் தலைவர்கள் கேட்டனர்.
பா.ஜ.க தலைவர் அமித் ஷா முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தரியாபூர் பகுதியிலும், நிதியமைச்சர் அருண் ஜெட்லி சூரத் மேற்கு தொகுதியிலும், குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி பஞ்சமால் தொகுதியிலும் உள்ள டீ கடைகளில் டீ குடித்தபடி 'மான் கீ பாத்' நிகழ்ச்சியைக் கேட்டனர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.,வின் முக்கியத் தலைவர்கள் குஜராத் மாநிலத்தில் இந்த பிரச்சார முறையைக் கையாண்டது இன்று அம்மாநில மக்களிடையே பலத்த ஆதரவு எழுந்துள்ளது. இதுகுறித்து மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, காங்கிரஸிற்கு பாடம் கற்பிக்கும் விதமாகவே நாங்கள் இன்று இந்த முறையைக் கையாண்டிருக்கிறோம். டீ விற்பவர்களை ஏதோ சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர்கள் போல பார்க்கும் மனப்பான்மையை காங்கிரஸ் கைவிடவேண்டும் என்று குறிப்பிட்டார்.
வருகிற டிசம்பர் மாதம் 9ம் தேதி குஜராத்தில் முதற்கட்ட தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு குஜராத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.