திடீர் திருப்பம்.. லட்சத்தீவில் இயக்குநர் ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக.. 15 பாஜக தலைவர்கள் ராஜினாமா
லட்சத்தீவு: கொரோனா பரவலை லட்சத்தீவு நிர்வாகி கையாண்ட விதத்தை விமர்சித்தது தொடர்பாக இயக்குநரும் நடிகையுமான ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து லட்சத்தீவு பாஜக தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
நாட்டிலேயே மிகவும் அமைதியான நாடுகளில் இடங்களில் ஒன்று லட்சத்தீவு. ஆனால் கடந்த சில மாதங்களாகவே அங்கு பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
அங்கு வாழும் மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தும் முடிவுகளையே மத்திய அரசின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல் தொடர்ந்து எடுத்து வருகிறார்.
மத்திய அரசு நிர்வாகி
லட்சத்தீவுக்கு மத்திய அரசின் நிர்வாகியாகக் குஜராத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் என்பவர் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் அங்குத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய முடிவுகளையே எடுத்து வருவதாக அங்கு வாழும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாகக் கடலோர மக்களின் குடியிருப்புகள் அகற்றம், மதுபான பார்களுக்கு அனுமதி, மாட்டிறைச்சிக்குத் தடை உள்ளிட்டவை அங்கு கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடும் விமர்சனம்
லட்சத்தீவில் மத ரீதியான பிளவை உருவாக்க பாஜக முயல்வதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். மாற்றுக் கட்சியினர் மட்டுமின்றி லட்சத்தீவு பாஜக நிர்வாகிகளுக்குமே பிரபுல் கோடா படேலின் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லட்சத்தீவில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரபல மலையாள செய்தி சேனலில் விவாதம் ஒன்று நடைபெற்றது.
ஆயிஷா சுல்தானா
அப்போது அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநரும் நடிகையுமான ஆயிஷா சுல்தானா, "லட்சத்தீவில் முன்பு ஜூரோ கொரோனா கேஸ்களே இருந்தன. ஆனால் இப்போது தினசரி 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. மத்திய அரசு லட்சத்தீவுக்கு எதிராக உயிரி ஆயுதத்தை (bioweapon) பயன்படுத்தியுள்ளது. இதை என்னால் தெளிவாகக் கூற முடியும்" என்றார். மேலும், பிரபுல் கோடா படேலுக்கு எதிராகவும் கருத்துகளைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
பாஜக தலைவர்கள் ராஜினாமா
இது தொடர்பாக பாஜகவினர் அளித்த புகாரில் அடிப்படையில் அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய திருப்பமாக ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து லட்சத்தீவை சேர்ந்த 15 பாஜக தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் லட்சத்தீவு பாஜக தலைவர் சி அப்துல் காதர் ஹாஜிக்கு எழுதிய கடிதத்தில், பிரபுல் கோடா தொடர்ந்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆயிஷா சுல்தானா தவறான மற்றும் நியமற்ற புகாரைப் பதிவு செய்து அவரது எதிர்காலத்தை அழித்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.