பாஜகவில் மூத்த தலைவர்கள் மூளைச்சாவு அடைந்தவர்களாக கருதப்படுகின்றனர்- யஷ்வந்த் சின்ஹா
மும்பை: இப்போதைய பாஜகவில் 75 வயதைக் கடந்த மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்படுவதோடு அவர்கள் மூளைச்சாவு அடைந்தவர்களாக தற்போதைய தலைமை கருதுவதாக பிரதமர் நரேந்திர மோடியை மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.
82 வதான மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது மத்திய நிதியமைச்சராக இருந்தவர். ஆனால், மோடி- அமித் ஷா கையில் கட்சி போன பின் சின்ஹாவுக்கு கட்சியில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது.
இந் நிலையில் மும்பையில் நிருபர்களிடம் பேசுகையில், பாஜகவில் 75 வயதை கடந்த அனைத்து தலைவர்களும், கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி முதல் (மோடி பிரதமராக பதவி ஏற்ற தினம்) மூளைச்சாவு அடைந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.
அந்த மூளைச்சாவு அடைந்தவர்கள் வரிசையில் நானும் இடம் பெற்றிருக்கிறேன் என்றார்.
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பற்றி கேட்டபோது, முதலில் இந்தியாவை உருவாக்குங்கள், அப்படி உருவாக்கினால் தானாகவே இந்தியாவில் அனைத்தும் உருவாகி விடும். அப்படிச் செய்யாமல் மேக் இன் இந்தியா திட்டத்தால் இந்தியாவை உருவாக்க முடியாது.
நான் நிதியமைச்சராக இருந்தபோது தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் தேவை ஏற்பட்டது. ஆனால் அதற்கான எந்திரங்கள் நம்மிடம் இல்லை. எனவே வெளிநாட்டில் இருந்து எந்திரங்களை வரி ஏதும் இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதித்தோம். இப்போது அனைத்து விதமான எந்திரங்களையும், உபகரணங்களையும் நாம் உள் நாட்டிலேயே தயாரிக்கிறோம். எனவே இந்தியாவை உருவாக்காமல் இந்தியாவில் எதையும் தயாரிக்க முடியாது என்றார்.
மேலும் மத்திய அரசு கூறி வரும் பொருளாதார வளர்ச்சி, வெறும் புள்ளிவிவரங்களின் அளவிலேயே இருக்கிறது; நடைமுறையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் நிறைய உள்ளன.
வெறும் ஓராண்டு புள்ளிவிவரங்களை வைத்துக் கொண்டு, பொருளாதாரம் 7.4 சதவீதமாகவும், 8 சதவீதமாகவும், 20 சதவீதமாகவும் வளர்ச்சியடைந்ததாகக் கூற முடியாது என்றார் சின்ஹா.
சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா தற்போது மத்திய நிதித் துறை இணையமைச்சராக உள்ளது குறிப்பிடத்தக்கது.