பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய மற்றொரு முக்கிய கட்சி! இதுவரை எக்ஸிட்டான கட்சிகள் எத்தனை தெரியுமா?
Recommended Video
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில், பாஜகவின் கூட்டணி கட்சியான அசாம் கன பரிசத் கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளது.
126 உறுப்பினர்களை கொண்ட, அசாமில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவிற்கு 61 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. போடோலாந்து மக்கள் முன்னணி (13 எம்எல்ஏக்கள்) மற்றும் அசாம் கன பரிசத் (14 எம்எல்ஏக்கள்) ஆகிய கட்சிகள் பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகித்தன.
அதில் அசாம் கன பரிசத் இப்போது கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
அசாமில் பாஜக கூட்டணி உடைந்தது... குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிர்ப்பு
குடியுரிமை சட்டம்
குடியுரிமை (திருத்தம்) சட்டம்-2016 தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அசாம் கன பரிசத் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது. கட்சி தலைவர் அதுல் போரா உட்பட மூன்று பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நிலையில், அவர்களும் பதவி விலகியுள்ளனர். 1985ம் ஆண்டு அசாம் ஒப்பந்த அடிப்படைக்கு எதிரானதாக குடியுரிமை சட்டம் இருப்பதாக கூறி, அசாம் கன பரிசத் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
ராஜ்நாத்சிங்
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்திய நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் அதுல் போரா. இதுபற்றி அவர் கூறுகையில், தேசிய குடியுரிமை பதிவு நடைமுறையை பயனற்றதாக்கும் வகையில், குடியுரிமை சட்டம் உள்ளது என்பதை ராஜ்நாத்சிங்கிடம் எடுத்துக் கூறினேன். ஆனால், அவர், லோக்சபாவில் இந்த சட்டம் நிறைவேறுவது உறுதி என்று கூறிவிட்டார். எனவே, கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்றார்.
போராட்டம்
இதனிடையே, அசாமில் நேற்று, இந்த புதிய சட்டத்திற்கு எதிராக குடிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். தலைநகர் குவகாத்தியில், கருப்புக் கொடி அசைத்து, மத்திய அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
எத்தனை கட்சிகள்
அசாம் கன பரிசத் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய 4வது கட்சியாகும். 2018ம் ஆண்டு மார்ச் மாதம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது. கடந்த மாதம், ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, இக்கூட்டணியிலிருந்து வெளியேறியது. அக்கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாஹா மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தவர்.
ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா
கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது. இது, அங்கு ஆட்சி கலைப்பு வரை இட்டுச் சென்றது. மகாராஷ்டிராவில் பாஜகவின் முக்கிய கூட்டணியான சிவசேனா, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை தனித்து சந்திக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.