கவுன்சிலர்களைக் கூட விடாமல் இழுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் ஒரு துயரம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வார்டு கவுன்சிலர்களையும் விட்டு வைக்காமல் தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது.
பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் ஆளும்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் கொத்து கொத்தாக பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போதே மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி தங்களுடன் மேற்கு வங்க எம்.எல்.ஏக்கள் தொடர்பில் உள்ளதாக கூறினார். இதற்கு மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததும் மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ க்கள் உட்பட கட்சி நிர்வாகிகள், மற்றும் கவுன்சிலர்கள், ஆகியோர் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு குறி வைக்கும் பாஜக.. திமுக எம்.பிக்கள் பின்னணி குறித்து தகவல் சேகரிக்குதாம்!
இதனையடுத்து மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் நகராட்சியில் கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் கவுன்சிலர்களாக இருந்த 17 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் விஜய் வர்கியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் முகுல் ராயும் கலந்து கொண்டார்.
இன்னும் என்னவெல்லாம் பண்ணத் திட்டமிட்டிருக்கோ இந்த பாஜக என்று மேற்கு வங்க அரசியல் களம் கலகலத்துப் போய்க் கிடக்கிறது.