டெல்லி தோல்வி... பாஜகவுக்கு பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை: வெங்கையா நாயுடு
டெல்லி: டெல்லி தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மீதமுள்ள 3 இடங்களில் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி கிட்டியது. நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜகவுக்கு இது மாபெரும் பின்னடைவு எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு. அப்போது டெல்லி தேர்தல் தோல்வி குறித்து அவர் கூறியதாவது :-
கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடித்த கையோடு, டெல்லி சட்டசபைத் தேர்தலை சந்தித்திருந்தால், அந்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கும் என தற்போது எண்ணத் தோன்றுகிறது.
ஆனால், அவ்வாறு செய்யாதது பாஜகவின் தேர்தல் உத்தி சார்ந்த தவறுதான். டெல்லி தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுளளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தற்போதும் அங்கு பாஜகவின் வாக்கு வங்கி சிதையாமல் உள்ளது' என்றார்.