எக்ஸிட் போல் முடிவுகள்: பாஜகவின் கோட்டையாகும் வடகிழக்கு மாநிலங்கள்?
குவஹாத்தி: அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் பாஜக இம்முறை பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள்.
2014 லோக்சபா தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 8-ல் பாஜக வென்றது. வடகிழக்கில் பாஜகவானது, காங்கிரஸ் கட்சியை உடைத்து அந்த வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவோர் பிரச்சனையும் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறும் இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது.
இது சிறுபான்மையினருக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரம் செய்தது. ஆனால் தற்போது இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாதான் பாஜகவுக்கு வடகிழக்கில் கை கொடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
எல்லாத்தையும் விடுங்க.. 22 தொகுதியில் யார் ஜெயிப்பா.. ஏன யாருமே அதைப் பத்தி பேசலை!!??
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் வடகிழக்கில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் பாஜக இம்முறை 18-ல் வெல்லும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அஸ்ஸாமில் உள்ள 14-ல் தொகுதிகளில் பாஜகவுக்கு 7 முதல் 13 தொகுதிகள் கிடைக்கலாம் என்றும் கூட எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அஸ்ஸாம் காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்தது. ஆனால் மெல்ல மெல்ல தனது பிடியை பாஜகவிடம் விட்டுக் கொடுத்து முழுமையாகவே 'கோட்டை' விட்டு நிற்கிறது காங்கிரஸ் என்பதுதான் கள யதார்த்தம்.