போலீஸ் குதிரையைத் தாக்கி காலை உடைத்த உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏ. கைது
டேராடூன்: போலீஸ் குதிரயை கம்பால் அடித்துக் காலை உடைத்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவர் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
டேராடூரனில் வைத்து இன்று காலை கணேஷ் ஜோஷி கைது செய்யப்பட்டார். தற்போது சக்திமான் என்ற அந்தக் குதிரைக்கு காயமடைந்த காலை அகற்றி விட்டனர் டாக்டர்கள். தற்போது அதற்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.
உடைந்து போன காலுக்கு ரத்த ஓட்டம் நின்று போனதால் கால் அழுகும் நிலை ஏற்பட்டது. அதை அப்படியே விட்டால் குதிரையின் உயிருக்கு ஆபத்து என்பதால் காலை அறுவைச் சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
முசவுரி பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி. திங்கள்கிழமை டேராடூனில் சட்டசபைக்கு அருகே மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இவர் கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தைக் கலைக்க குதிரைப்படை போலீஸார் வந்தனர். இதனால் கோபமடைந்த கணேஷ் ஜோஷி திடீரென பெரிய தடியை எடுத்து போலீஸ் குதிரை ஒன்றின் காலில் சரமாரியாக அடித்தார். இதில் அந்தக் குதிரையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயத்தில் துடித்த குதிரை உடனடியாக அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குதிரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் தற்போது காலை அகற்றி விட்டு செயற்கைக் காலைப் பொருத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நேரு காலனி போலீஸார், கணேஷ் ஜோஷி, அவரது கூட்டாளிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது மிருக வதைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை ஜோஷி கைது செய்யப்பட்டார். மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் கூறியுள்ளனர்.