விபத்தில் பூனையை கொன்ற பாஜக எம்.எல்.ஏ கார் டிரைவர் கைது! மும்பையில் சம்பவம்!
மும்பை: பூனை மீது காரை ஏற்றி கொண்ட பாஜக எம்.எல்.ஏ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவின் கலினா தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக பணியாற்றுபவர் போலேநாத் மிஷ்ரா. இவரிடம் டிரைவராக வேலை பார்ப்பவர் ராஜன் யாதவ் (30).
போலேநாத், மும்பையின் சாந்தாகுரூஸ் (கிழக்கு) பகுதியிலுள்ள கிரீன்பீல்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். குடியிருப்பின் மெயின் கேட்டில் கார் திரும்பியபோது, பாதுகாவலர் அறையின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பூனை காரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து விட்டது.
இதை பார்த்த அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்மணி, விலங்குகள் நல தன்னார்வ அமைப்பான அனிமல் வெல்ஃபேர் அசோசியேசனுக்கு போன் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து விலங்கு அமைப்பினர் அடுத்த நாள் சம்பவ இடத்துக்கு வந்து பூனை இறந்துள்ளதை உறுதி செய்து கொண்டனர். மேலும் கண்ணால் பார்த்த சாட்சியை அழைத்துச் சென்று வகோலா காவல் நிலையத்தில் டிரைவர் ராஜன் யாதவுக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ராஜன் யாதவ் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து விலங்கு நல அமைப்பின் தலைவர் சாலிம் சாரானியா கூறுகையில், "பூனை கொலை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் அளிக்க விருப்பப்படுவதாகவும், அதற்கு உங்கள் உதவி தேவை என்றும் ஒரு பெண் எங்கள் அமைப்புக்கு போன் செய்தார்.
அதன்பேரில் நாங்கள் வந்து அந்த பெண்களுக்கு உதவி செய்தோம். விலங்குகள் நல அமைப்பினரை தரக்குறைவாக பேசி ராஜன் யாதவ் திட்டினார். இவர் ஏற்கனவே இருமுறை விலங்குகளை காரில் ஏற்றி கொன்றுள்ளார். இப்போதும்கூட பூனை அடிபட்ட பிறகு அதை காப்பாற்ற முயலாமல் காரை ஓட்டி சென்றுள்ளார்" என்று குற்றம்சாட்டினார்.