தீவிரவாதத்தை பரப்புகிறது.. வலதுசாரி இந்து அமைப்புக்கு தடை கேட்கிறார் பாஜக எம்.எல்.ஏ
டெல்லி: தீவிரவாதத்துக்கு ஈடான செயல்களில் ஈடுபட்டுவரும் சனாதன் சன்ஸ்தா என்ற வலதுசாரி இந்து அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வடக்கு கோவா பகுதியின் செயின்ட் ஆன்ட்ரே தொகுதி எம்.எல்.ஏ விஷ்ணு சூர்ய நாயக் வாக், கோரிக்கைவிடுத்துள்ளது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரு ஜனநாயக நாட்டில் கருத்தை, கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். வன்முறையால் கருத்தை எதிர்கொள்வது தீவிரவாத செயல். ஏனெனில், நமக்கு எதிராக கருத்து கூறிவிட கூடாது என்ற அச்ச உணர்வை கருத்தாளர்கள் மனதில் உருவாக்குவதுதான் இந்த தாக்குதல்களின் நோக்கம்.
2009ம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை பெற்ற உத்வேகத்தில், சனாதன் சன்ஸ்தா அமைப்பு முன்பைவிட தீவிர கதியில் செயல்பட்டுவருகிறது. முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் இந்த அமைப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
கர்நாடகாவில் செயல்படும் பிரமோத் முத்தாலிக்கின் ஸ்ரீராமசேனை அமைப்பு, மங்களூரில் மது பாரில் புகுந்து மது குடித்த இளம் பெண்களை அடித்து உதைத்தது. ஆனால் அதில் யாரும் சாகவில்லை. இருப்பினும் முத்தாலிக்கை கோவாவிற்குள் அனுமதிக்க அரசு தடைவிதித்துள்ளது. அப்படியிருக்கும்போது, குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்ப்டும், சனாதன் சன்ஸ்தா அமைப்பையும் தடை செய்ய வேண்டும்.
இஸ்லாமிய வலதுசாரிகளுக்கு சிமி போல, இந்து வலதுசாரி சிந்தனைகளை சனாதன் சன்ஸ்தா அமைப்பு தூண்டிவருகிறது. இவ்வாறு விஷ்ணு சூர்ய நாயக் தெரிவித்தார். பன்சாரேவை படுகொலை செய்தது இந்த அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்த சமீர் கெய்க்வாட் உள்ளிட்ட சிலர் சிக்கியுள்ளனர். மேலும் பலரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது; இதனால்தான் இப்போது இந்த அமைப்பின் பெயர் அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.