கோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்!
கோர்ட் வாசலில் பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தப்பட்டுள்ளார்
Recommended Video
அலகாபாத்: "என் அப்பா எங்களை கொல்ல பார்க்கிறார்" என்று குற்றம் சாட்டிய பாஜக எம்எல்ஏ மகளின் காதல் கணவர் கோர்ட் வாசலிலேயே கடத்தப்பட்ட சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ரா. இவரது மகள், சாக்ஷி. 23 வயசாகிறது. இவர் காலேஜ் படிக்கும்போதிருந்தே அஜிதேஷ் குமார் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.
ஆனால் அஜிதேஷ் குமார் தலித் என சொல்லப்படுகிறது. இதனால் எப்படியும் வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்து கொள்ள மாட்டார்கள் என்பதால் கோயிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டனர். பிறகு முறைப்படி திருமணத்தை பதிவு செய்து அதற்கான சான்றிதழையும் பெற்று விட்டனர்.
காதலித்து திருமணம் செய்தேன்.. அப்பா மிரட்டுகிறார்.. வீடியோவில் கதறிய பாஜக எம்எல்ஏ மகள்!
மணப்பெண்
இந்நிலையில், தன்னுடைய தந்தை கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போதிய பாதுகாப்பு தங்களுக்கு வழங்கக்கோரியும் சோஷியல் மீடியாவில் 4 நாளைக்கு முன்பு எல்லாரிடமும் உதவி கேட்டார் மணப்பெண் சாக்ஷி. இது சம்பந்தமான வீடியோவும் வெளியிட்டிருந்தார்.
|
உயிருக்கு ஆபத்து
அதில், "என்னுடைய அப்பா, அண்ணன், மேலும் சில குண்டர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எங்களுக்கு ரேபரேலி போலீஸார்தான் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒருவேளை நாங்கள் ரெண்டு பேரும் கொல்லப்பட்டால் பரேலி மாவட்டத்தை சேர்ந்த எம்பி., எம்எல்ஏக்கள் என்னுடைய அப்பாவுக்கு யாரும் உதவக்கூடாது.
பாதுகாப்பு
என்னுடைய உயிருக்கோ, அல்லது என் கணவரின் உயிருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு என் அப்பாதான் பொறுப்பு. அப்படி ஒரு அசம்பாவிதம் ஏதாவது நடந்துவிட்டால் அவரை நான் சட்டத்திற்கு முன்னாடி நிறுத்தி உரிய தண்டனை பெற்று தருவேன்" என்று சொல்லி இருந்தார்.
காதல்
இந்த வீடியோவை எம்எல்ஏவான பெண்ணின் அப்பாவும் பார்த்தார். "நான் காதலுக்கு எதிரானவன் கிடையாது, அதனால் மகளை விருப்பமானவனுடன் சேர்த்து வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த பையனுக்கு என் மகளை விட வயசு ரொம்ப அதிகம். அவனுக்கு வேலையும் எதுவும் இல்லை" என்று வருத்தமாக தெரிவித்திருந்தார். இதனிடையே, பாதுகாப்பு தரலாம் என்றால், ரெண்டு பேரும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்ற கூறிய போலீசார், தம்பதிகளை தேடி வந்தார்கள்.
கோர்ட்
இந்நிலையில், அலகாபாத் கோர்ட்டில் கடந்த 11-ம் தேதி சாக்ஷி தம்பதியினர் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி ஒரு பொதுநல மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வர இருந்தது. இதற்காக சாக்ஷி தம்பதியினர் காலை 8.30 மணியளவில் கோர்ட் வாசல் 3-ம் எண்ணில் நின்று கொண்டிருந்தனர்.
துப்பாக்கி
அப்போது அங்கு ஒரு கருப்பு நிற கார் வந்து வேகமாக நின்றது. அதில் வந்த சிலர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும், பின்னர், அஜிதேஷை அதே காரில் கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இது மிகப்பெரிய பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கேமிரா
கோர்ட் வளாகத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு, கடத்திய கார் நம்பரை வைத்து விசாரணை ஆரம்பமாகி உள்ளது. அந்த கார் ஆக்ராவை சேர்ந்தது என்பது மட்டும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொதுவாக உத்திரபிரதேசத்தில்தான் சாதீய கொடுமைகள் அதிகம், இதன்மூலம் நடக்கும் படுகொலைகளும் அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தலித் இளைஞருடன் பாஜக எம்எல்ஏ மகள் ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்டதால், கடத்தல் வரை வந்துள்ள இந்த விவகாரத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.