மகாராஷ்டிர சட்டசபை பாஜக தலைவர் - நாளை தேர்வு
மும்பை: மகாராஷ்டிர சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மும்பையில் நடைபெறுகிறது. அப்போது சட்டசபை பாஜக தலைவரை அவர்கள் தேர்வு செய்யவுள்ளனர். இவரே மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்பார்.
மகாராஷ்டிர சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. அங்கு யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் கூட்டணி ஆட்சியே வரவுள்ளது.
பாஜக, சிவசேனாவின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடி தங்களது தலைவரை, அதாவது புதிய முதல்வரைத் தேர்வு செய்யவுள்ளனர்.
அதன் பின்னர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரும். இதைத் தொடர்ந்து புதிய ஆட்சியை அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்புவிடுப்பார்.
நாளை முற்பகல் 11 மணிக்கு பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் விதான் பவனில் நடைபெறும் என்று மூத்த பாஜக தலைவர் ஏக்நாத் கட்சே தெரிவித்துள்ளார்.
புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.