ஆட்சி அமைக்க என்ன செய்யலாம்... பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.... நாளை காலை நடக்கிறது!
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நாளை காலை நடக்கிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் கூட்டம் பெங்களூருவில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்க உள்ளது. இதற்காக கட்சியின் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் தேர்தல் நடந்தது. அதன்படி பெரும்பான்மைக்கு 112 பேரின் ஆதரவு தேவை. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை.
இந்த நிலையில், 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது. மஜதவின் குமாரசாமியை முதல்வராக அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.
இரு தரப்பும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன. கர்நாடகா தேர்தல் நிலவரம் மற்றும் ஆட்சி அமைப்பது குறித்து பாஜகவின் பார்லிமென்ட் போர்ட் கூட்டம் டெல்லியில் நடக்க உள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா சட்டசபை தேர்தலில் வென்ற பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளனர்.