பாராளுமன்றத்திற்கு குதிரையில் வந்த பா.ஜ.க. எம்.பி. !
டெல்லி: டெல்லி அரசின் வாகன கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. எம்.பி. ராம் பிரசாத் சர்மா நேற்று குதிரையில் பாராளுமன்றத்திற்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வாகனங்களை ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு எண் அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுத்தது.
இந்த திட்டம் சோதனை அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், 2-ம் கட்ட சோதனை 15 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 30-ந்தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தற்போது நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் சில எம்.பி.க்கள் வாகன கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றவில்லை. திங்கட்கிழமை பாஜக எம்.பி பரேஷ் ராவல் தனது இரட்டைப்படை எண்கள் கொண்ட காரில் பாராளுமன்றம் வந்தார். இருப்பினும், விதியை மீறியதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அவர் மன்னிப்பு கோரினார். வாகன கட்டுப்பாட்டை மீறியதற்காக அபராதம் செலுத்திவிட்டு அதற்கான செலுத்துச்சீட்டையும் டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வாகன கட்டுப்பாட்டுக்கு மற்றொரு பா.ஜ.க. எம்.பி ராம் பிரசாத் சர்மா நூதனமான வகையில் நேற்று எதிர்ப்பு தெரிவித்தார். நன்றாக அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை ஒன்றில் அவர் பாராளுமன்றத்திற்கு வந்தார்.
குதிரையின் மேல் காற்று மாசுப்பாடு பற்றி பிரச்சார வாசகத்தையும் எழுதி தொங்கவிட்டிருந்தார். இது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அதேபோல் மற்றொரு பாஜக எம்.பி.,யான மனோஜ் திவாரி என்பவரும் சைக்கிளில் பாராளுமன்றத்திற்கு வந்தார்.