கூட்டணியில் லடாய் ஆரம்பம்... பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விளாசிய பாஜக எம்பி!
டெல்லி: மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதாதளம் இடம்பெறாது என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எடுத்த முடிவை பாஜக மூத்த தலைவர் கோபால் நாரயண் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பாஜக மத்தியில் 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. நேற்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 57 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஆனால், பாஜகவின் நெருங்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் இடம்பெறவில்லை. மேலும், பாஜக ஒரே ஒரு அமைச்சர் பதவியை வழங்கியதால், அதனை ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் நிராகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக, பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கோபால் நாராயண் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில்," நிதிஷ்குமார் சொந்த நலனை மட்டுமே எப்போதும் சிந்திப்பார். அவரது முடிவுகள் சொந்த நலனை பேணுவதாகவே இருக்கும். அவர் மோசமான சுயநலக்காரர்.
பாஜக தயவுடன் பீகாரில் ஏழு ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால், அவர் சொந்த பலத்தில் நடத்தி வருவதாக நினைத்தால் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிடுவோம். எந்த ஒரு கூட்டணி கட்சியினரும் அமைச்சர் பதவி கேட்டு போராடவில்லை. ஆனால், நிதிஷ்குமாரின் முடிவை பீகார் மக்கள் விரல் நீட்டி கேட்பார்கள் என்று நினைக்கிறேன்," இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
இதனிடையே, அமைச்சரவை இடம் தொடர்பாக பாஜக- ஐக்கிய ஜனதாதளம் இடையிலான கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், நேற்று நடந்த மோடியின் பதவி ஏற்பு விழாவில் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது நிதிஷ்குமார் கூட்டணி தொடர்பாக விளக்கமளித்தார்.
அப்போது, பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாகவும், இருகட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படும். ஒரேயொரு அமைச்சர் பதவி என்ற விஷயத்தை எங்கள் கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான் அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என்று முடிவு செய்தோம். இந்த விஷயத்தில் எந்த வருத்தமும் இல்லை," என்று தெரிவித்துள்ளார்.