விவசாயிகள் தற்கொலை செய்வது ஒரு ஃபேஷனாகிவிட்டது: பாஜக எம்.பி. கிண்டல்
மும்பை: மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவதால் விவசாயிகள் தற்கொலை செய்வது ஒரு ஃபேஷனாகிவிட்டது என்று பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிழைக்க வழியில்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை 124 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் வடக்கு மும்பை பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி நிகழ்ச்சி ஒன்று பேசுகையில்,
விவசாயிகள் பசி மற்றும் வேலையின்மையால் மட்டுமே தற்கொலை செய்யவில்லை. அவர்கள் தற்கொலை செய்வது ஒரு ஃபேஷன், டிரெண்ட் ஆகிவிட்டது. விவசாயிகள் தற்கொலை செய்தால் மகாராஷ்டிரா அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அளித்தால் மற்றொரு மாநில அரசு ரூ.7 லட்சம் அளிக்கிறது. விவசாயிகளுக்கு பணம் அளிக்க அரசுகள் இடையே ஒரு போட்டியே நடக்கிறது என்றார்.
ஷெட்டியின் பேச்சிற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோபால் ஷெட்டியின் பேச்சை கேட்டாலே பாஜக விவசாயிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பது தெரிய வந்துள்ளது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
விளைச்சல் இல்லாமை மற்றும் கடன் தொல்லையால் விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்வது இவருக்கு ஃபேஷனாகத் தெரிகிறதா என்று மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்.