பாஜக மாணவர் அமைப்பை எதிர்த்த கார்கில் மாவீரரின் மகளை தாவூத்துடன் ஒப்பிட்ட பாஜக எம்பி!
ஏபிவிபியை எதிர்த்ததால் கார்கில் மாவீரரின் மகளை நிழல் உலக தாதா தாவூத்துடன் ஒப்பிட்டு அவமதித்துள்ளார் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை எதிர்த்ததால் கார்கில் மாவீரர் கேப்டன் மன்தீப் சிங்கின் மகள் குர்மேகர் கவுரை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா ஒப்பிட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.பி.வி.பி.க்கு எதிராக பிரசாரம் செய்ததால் தமக்கு பலாத்கார மிரட்டல் வருவதாக டெல்லி பல்கலைக் கழக மாணவியான சிங் மகளுமான குர்மேகர் கவுர் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார். அத்துடன் தமது சமூக வலைதள பக்கங்களில் ஏபிவிபிக்கு எதிரான வாசகங்களை ஏந்திய படங்களையும் பதிவிட்டுள்ளார்.
— Pratap Simha (@mepratap) February 26, 2017
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் கர்நாடகா மாநிலம் குடகு எம்.பி.யான பிரதாப் சிம்ஹா, தாவூத் இப்ராகிமுடன் குர்மேகர் கவுரை ஒப்பிட்டு தமது ட்விட்டரில் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராணுவ வீரரின் மகள் குர்மேகர் கவுர், போலீஸ்காரரின் மகன் தாவூத் இப்ராகிம் என ஒப்பிட்டிருக்கிறார்.
Who's polluting this young girl's mind? A strong Arm Force prevents a war. India never attacked anyone but a weak India was always invaded. https://t.co/gXHkAGi9sh
— Kiren Rijiju (@KirenRijiju) February 27, 2017
அத்துடன் தாவூத் இப்ராகிம் ஒருபோதும் தம்முடைய தேசவிரோத நடவடிக்கைக்காக அவருடைய தந்தையின் பெயரை பயன்படுத்தியது இல்லை எனவும் சாடியுள்ளார் பிரதாப் சிம்ஹா. அதேபோல் மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜூ, இந்த இளம் பெண்ணின் சிந்தனையை மாசுபடுத்தியது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக எம்.பி.யின் இந்த ஒப்பீட்டுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.