பாஜக எம்.பி.சாக்ஷி மகாராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்த அல்கொய்தா தீவிரவாதிகள் !
டெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் உன்னாவ் தொகுதியின் எம்.பி.யும் ஆகிய சாக்ஷி மகாராஜ் தனக்கு அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மக்களவைத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாக்ஷி மகாராஜ். இவர் சில மாதங்களுக்கு முன் கருத்து தெரிவிக்கையில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்துக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்.
பாஜக ஆட்சியில் ராமர் கோயில் கட்டப்படாவிட்டால், காங்கிரஸ் ஆட்சியிலா கட்டப்படும். இல்லை முலாயம் சிங், மாயாவதி ராமர் கோயிலை கட்டுவார்களா?
ராமர் கோயில் எங்கிருந்ததோ அங்கு மீண்டும் எழுப்பப்படும். பாபர் மசூதியின் பெயரில் அங்கிருந்து ஒரு செங்கலைக் கூட யாரும் அசைக்க முடியாது. என சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
மேலும், அயோத்தியில் ராமர் கோயில் ஒன்று இருந்தது. அந்த கோயில் வரும் காலத்தில் திரும்பவும் கட்டப்படும். இது கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். 2019-ம் ஆண்டுக்குள், அதாவது அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சாக்ஷி மகராஜ் கூறுகையில், தனக்கு அல்கொய்தா தீவிரவாத அமைப்பினரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.