திருமண நிகழ்ச்சியில் மோதல்... பாஜக எம்பிக்கு "பளார்" விட்ட இளைஞர்... 2 பேர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, பாஜக எம்.பி.யை இளைஞர் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதி பாஜக எம்.பி. சோனாராம் சவுத்ரி. இவர் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த கர்தாராம் என்ற இளைஞருக்கும், சோனாராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சோனாராமை கன்னத்தில் அறைந்த கர்தாராம், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் குறித்து சோனாராமின் தனி பாதுகாப்பு அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கர்தாராமையும், அவருடன் இருந்த பிரேமாராம் பாடு என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியாளர் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பார்மர் மாவட்ட ஆட்சியாளர் சுதீர் சர்மா கூறுகையில், "நான் எம்.பி.யுடன் நடந்து சென்றேன். ஆனால் சம்பவம் நடந்தபொழுது நாங்கள் இருவரும் சற்று தொலைவில் இருந்தோம். எம்.பி.யை ஒருவர் தள்ளி விட்டு சென்றதை அடுத்து இந்த மோதல் நடந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.