”வழிதான் கேட்டேன்... காவலரும் சொன்னார்”- டெல்லியில் இரட்டை எண் காரில் வந்த பாஜக எம்.பி விளக்கம்
டெல்லி: டெல்லியில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண் கார்கள் சோதனை ஓட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து நேற்று ஒற்றைப்படை நாளில் இரட்டைப்படை எண் காரில் வந்த பாஜக எம்.பி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் வாகனக் கட்டுப்பாட்டு திட்டத்தின்படி ஒற்றைப்படையில் முடிவடையும் பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனங்கள் ஒற்றைப்படை தேதிகளான ஜனவரி 1, 5, 7, 9, 11, 13, 15 ஆகிய நாள்களில் செல்ல அனுமதிக்கப்படும்.
இரட்டைப் படை பதிவு எண் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளான 2, 4, 6, 8, 12, 14 ஆகிய நாள்களில் செல்ல அனுமதிக்கப்படும்.
இந்த 15 நாள்களில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் அதாவது ஜனவரி 3, 10 ஆகிய தேதிகளில் அனைத்து வாகனங்களும் செல்லலாம். டெல்லியில் இயக்கப்படும் வெளி மாநில வாகனங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.
ஆனால், பெண்கள் இயக்கும் கார்கள், சிஎன்ஜி வாயு கார்கள், பேட்டரி கார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வகானங்கள், பொது பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் விஐபி வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை ஓட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது உத்தரபிரதேசத்தின் பாக்பட் தொகுதி பா.ஜ.க எம்.பி. சத்யபால் சிங், இரட்டைப்படை பதிவு எண் கொண்ட காரில் நேற்று டெல்லிக்கு வந்தார்.
டெல்லியில் நேற்று ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவரது காரை டெல்லி போக்குவரத்துக் காவலர் நடுவழியில் நிறுத்தினார்.
அந்தக் காரில் பா.ஜ.க கொடி இருந்ததுடன், நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட "எம்.பி. வாகனம்" என்ற லேபிளும் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்தது. இருப்பினும், இரட்டைப்படை எண் கொண்ட வாகனத்துக்கு 1-ந் தேதி அனுமதியில்லை என்பதால் அப்பகுதியில் இருந்த போக்குவரத்துக் காவலர் காரை நிறுத்தினார். அப்போது காரில் இருந்த சத்யபால் சிங் "நான் பாஜக எம்.பி, மும்பை காவல்துறையின் முன்னாள் ஆணையர்" என்று கூறினார்.
இதையடுத்து, அந்தக் காவலர் "மக்கள் பிரதிநிதி என்பதால் உடனடியாக அபராதம் விதிக்கவில்லை. விதிகளைக் கடைப்பிடித்து டெல்லி அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளியுங்கள்" என்று கூறி அரசு வெளியிட்ட வாகனக் கட்டுப்பாடு விதிகள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை அளித்தார். பின்னர் மரியாதையுடன் சத்யபால் சிங்கை அனுப்பி வைத்தார்.
இது குறித்து சத்யபால் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "விதிமீறலுக்காக எனது காரை காவலர் நிறுத்தவில்லை. ஏற்கெனவே நான் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவில்தான் இருக்கிறேன். நிகழ்ச்சியொன்றுக்கு செல்லவிருந்த நான், அதற்கான இடம் எங்கிருக்கிறது என இந்தியா கேட் அருகே இருந்த காவலரை அழைத்துக் கேட்டேன். நகரக் காவல் துறையின் ஆணையராக நான் இருந்துள்ளேன். அதனால், சட்டத்தையும், விதிகளையும் மீறிச் செயல்பட மாட்டேன்" என்றார்.