கொரோனாவை விரட்ட...களிமண் பூசி சங்கு ஊத வேண்டும்... பாஜக எம்.பி டிப்ஸ்!!
ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் என்ற அரக்கனை விரட்டுவதற்கு உலகமே இன்று மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. உலக நாடுகளில் சில மருந்து கண்டுபிடிப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில் பாஜக தலைவர்கள் ஆளுக்கொரு டிப்ஸ் கொடுத்து மக்களை குழப்பி வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது சேர்ந்து இருப்பவர் பாஜக எம்.பி. சுக்பீர் சிங். இவர் கொடுக்கும் டிப்ஸ், உடல் முழுவதும் களிமண் பூசிக் கொள்ள வேண்டும், சங்கு ஊத வேண்டும் என்பதுதான். ராஜஸ்தான் மாநிலத்தில், டாங்க்-சவாய் மாதோபூரைச் சேர்ந்த இந்த எம்.பி. கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கிடக்க வேண்டுமானால், களிமண் சகதியில் அமர்ந்து கொண்டு சங்கு ஊத வேண்டும் என்று கூறுகிறார்.
இதற்கு முன்பும் கடந்த ஜூன் மாதம் பேட்டி அளித்து இருந்த சுக்பீர் சிங், களிமண்ணில் அமர்ந்தவாறு யோகா செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவ்வாறு கூறி இருந்தார்.
இவரைத் தொடர்ந்து, கொரோனாவை விரட்ட வேண்டுமானால், அப்பளம் சாப்பிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ரம்பால் மேக்வால் தெரிவித்து இருந்தார். அத்மநிர்பர் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் அப்பளம் தயாரிக்கப்படுகிறது. பாபி ஜி அப்பளம் வந்துள்ளது. அதை வாங்கி சாப்பிடுங்கள் என்று கூறி இருந்தார். பின்னர் அவருக்கே கொரோனா வந்தது ஹைலைட்டான விஷயம்.
சென்னையில் மீண்டும் அதிகரிப்பு- 1187 பேருக்கு பாதிப்பு- வடமாவட்டங்களில் தொடரும் விஸ்வரூபம்!
இதேபோல் பசு மூத்திரம் , சாணம் மூலம் கொரோனாவை விரட்ட முடியும் என்று அசாம் எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா தெரிவித்து இருந்தார். குஜராத்தில் இருக்கும் சில மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்படுகிறது. கொரோனா நோயாளிகள் பசுவிற்கு அருகில் அமர வைக்கப்பட்டு, மாட்டு சாணம் மற்றும் மாட்டு மூத்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது என்று பேசி இருந்தார். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.