எஸ்.சி., எஸ்.டி., சட்டம் பலவீனமாகிவிட்டது.. தலைமை மீது பாஜக எம்.பி. பகிரங்க அதிருப்தி!
டெல்லி: மத்திய அரசு மீது வட கிழக்கு டெல்லி எம்பியும், அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் அமைப்பு சேர்மேனுமான உதித்ராஜ் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முதன்முறையாக முன் ஜாமின் வழங்கியது. எந்த கைது நடவடிக்கைக்கு முன்னரும் அடிப்படையான விசாரணை நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பிற சட்டங்கள்
இந்த நிலையில், உதித் ராஜ், அளித்த பேட்டி: உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்யப்படும், 10-12% வழக்குகள் மட்டுமே உண்மையானதாக இருப்பதாகவும், பிற வழக்குகள் ஜோடிக்கப்பட்டவையாகவும், உள்நோக்கத்துடன் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியானால், 1961ம் ஆண்டு வரதண்டசனை தடை சட்டம், பலாத்கார தடை சட்டங்களையும் உச்சநீதிமன்றம் இதே போல அணுகுமா? ஏனெனில், அந்த வழக்குகளிலும் சுமார் 70 சதவீதம் உள்நோக்கத்துடன்தான் பதியப்படுவதாக கூறப்படுகிறது. அப்படியானால், அந்த சட்டங்களையும் நீதிமன்றம் தடை செய்யுமா?
நடைமுறை சிக்கல்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், எப்ஐஆர் பதிவு செய்ய காலதாமதம் ஆகிறது. சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தாமதம் ஆகிறது. இதுபோன்ற நடைுறை சிக்கல்களை நீக்குவதை தவிர்த்துவிட்டு, சட்டத்தையே நீக்குவது சரியாகாது. உச்சநீதிமன்றம் அதை செய்யவும் முடியாது. நான் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்பினேன், ஆனால், இன்னும் எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
சீராய்வு மனு
எனவே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு உடனே சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், நாடாளுமன்றத்தில் மீண்டும், சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பலவீனப்படுத்துவதை ஏற்க முடியாது. பாஜக இந்த விஷயத்தில் தனது முடிவை அறிவிக்க வேண்டும். பாஜகவின் கூட்டணி கட்சியினர் பலரும் கூட இதே கருத்துடன் உள்ளனர்.
கொள்கை வேறுபாடு
நான் பாஜகவின் எம்.பி.யாக இருக்கலாம். ஆனால், அதன் கொள்கைகள் முழுக்க உடன்பாடில்லை. சமூக அடையாளம், மத அடையாளம் போன்றவை ஒரு கட்சியோடு இணைந்து பணியாற்ற அவசியம் என கருதவில்லை. நான் பவுத்த மதத்தை பின்பற்றுகிறேன். பாஜகவின் கொள்கை அது கிடையாது. இதுதான் எனக்கும் கட்சிக்கும் நடுவேயான வித்தியாசம். நான் ஜாதி கட்டமைப்பை துடைக்க விரும்புகிறேன், அவர்கள் விரும்பவில்லை.
உ.பி.யில் பெரும்பாடு
ஆர்எஸ்எஸ் கொள்கைகள் பற்றி நான் பேச முடியாது. அவர்களிடம்தான் அதை கேட்க வேண்டும். உத்தரபிரதேசம் பாஜகவுக்கு கஷ்டமான மாநிலமாக மாறிக்கொண்டுள்ளது. சமாஜ்வாதியும், பகுஜன்சமாஜ் கட்சியும் இணைந்து செயல்படுகிறார்கள். எனவே தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை மீண்டும் பாஜக பக்கம் வர வைக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிிவித்தார்.