நில ஆர்ஜித சட்ட விழிப்புணர்வை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொடுப்போம்: நிர்மலா சீதாராமன்
பெங்களூரு: நில கையகப்படுத்துதல் சட்டத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிவருவதாக மத்திய அமைச்சரும், பாஜக செய்தித் தொடர்பாளருமான நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
பெங்களூருவில் நடைபெற்றுவரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் இரண்டாம் நாளான இன்று, மதிய உணவு இடைவேளையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நில கையகப்படுத்துதல் சட்டத்திலுள்ள அம்சங்களை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. ஆனால், அந்த சட்டத்திற்கு எதிரான பொய் பிரச்சாரத்திற்காகவே அஞ்சுகிறோம்.
நில சட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, ரேடியோ வாயிலான உரையின்போது, மக்களுக்கு தெளிவாக எடுத்து சொல்லியுள்ளார். இதுகுறித்து யாருடன் வேண்டுமானாலும், விவாதம் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
நில சட்டம் தொடர்பான பொய் வதந்திகளை பரப்புவதில் காங்கிரசுக்குதான் அதிக ஆர்வம் உள்ளது. நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்தது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு இதுவரை காங்கிரஸ் பதில் சொல்லாத நிலையில், பாஜக அரசோ, தங்களது ஒவ்வொரு திட்டத்தையும் மக்களிடம் விளக்கி சொல்லிவருகிது.
நில சட்டம் தொடர்பான தகவல்களை ஒவ்வொரு கிராமத்திலும் போய் எடுத்து சொல்ல உள்ளோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.