உ.பியில் வெல்லப்போகும் 9வது எம்.பி யார்?... பலப்பரிட்சையில் பாஜக!
இன்று நடைபெறும் ராஜ்யசபாதேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் வெற்றி பெறப்போகும் 9வது வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.
Recommended Video
லக்னோ : இன்று நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் அனைவரும் உற்றுபார்க்கும் மாநிலமாக இருப்பது உத்தரபிரதேசம். இங்கு போட்டியிடும் 9 பாஜக வேட்பாளர்களில் 8 பேரின் வெற்றி உறுதியான நிலையில் 9வது எம்பியாக யார் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ராஜ்யசபாவில் காலியாகும் 58 எம்பி பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் வெற்றி பெறப் போகும் பாஜகவின் 9வது வேட்பாளருக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கு 37 எம்எல்ஏக்களின் ஆதரவு ஓட்டுகள் தேவை. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்த்து உத்தரபிரதேச சட்டசபையில் 324 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் 8 எம்பிகளை தேர்வு செய்து ராஜ்யசபாவுக்கு அனுப்புவதில் எந்த சிக்கலும் இல்லை.
8 எம்பிகள் தேர்வு செய்யப்பட்ட பின்னரும், பாஜகவிற்கு 28 வாக்குகள் உள்ளன. இதனால் பாஜகவின் 9வது வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 9 வாக்குகள் தேவை. பாஜகவின் 9வது வேட்பாளர் தொழிலதிபர் அனில் அகர்வால்.
அனில் அகர்வால் வெற்றி பெற பாஜக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவை நம்பி இருக்கிறது. சுகல்தேவின் பாரதிய சமாஜ் கட்சிக்கு இருக்கும் 4 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற பாஜக முயல்கிறது. இதே போன்று அண்மையில் பாஜகவில் இணைந்த நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் அகர்வாலின் ஓட்டையும் சேர்த்து 5 எம்எல்ஏக்களை பெற்று விடலாம் என பாஜக கணக்கு போடுகிறது.
எஞ்சியுள்ள தேவைப்படும் 4 ஓட்டுகள் தான் பாஜகவின் 9வது எம்பி வேட்பாளரை தீர்மானிக்கப்போகிறது. சில எம்எல்ஏக்கள் மாற்றி வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. எனினும் சமாஜ்வாதி கட்சி இரண்டு தினங்களுக்கு முன் இரவு விருந்து நடத்தி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருப்பதை பறைசாற்றியுள்ளது. சமாஜ்வாதி கட்சியில் செல்வாக்கு மிக்கவராக இருந்த நரேஷ் அகர்வால் சில எம்எல்ஏக்களுடன் ரகசிய பேச்சு நடத்தி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை பெறுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறது அந்தக் கட்சி.