புதுச்சேரியிலும் குழப்பும் பாஜக.. 3 நியமன எம்எல்ஏக்களும் ராஜ்நாத்சிங்குடன் சந்திப்பு!
புதுச்சேரி சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட 3 பாஜக எம்எல்ஏக்கள் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளனர்.
டெல்லி: நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்று அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து புதுவை எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி மாநில அரசு பொறுப்பேற்று ஓராண்டான போதும் சட்டசபைக்கான நியமன எம்எல்ஏக்கள் அறிவிக்கப்பட்டவில்லை. இதனால் மத்திய அரசின் உத்தரவுப் படி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி தாமாகவே 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக அறிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், பாஜக பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி உள்ளிட்டோர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் துணை நிலை ஆளுனர் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் எம்எல்ஏக்கள் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு, புதுவை அரசு உள்ளிட்டவை ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இத்னிடையே துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து புதுச்சேரியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்ததைய சூழலில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஊழலில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் நியமன எம்எல்எக்கள் விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும் 3 பேரும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏற்கனவே பாஜகவின் பிரதிநிதி போல துணை நிலை ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டி கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி இடையே அதிகாரப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நியமன எம்எல்ஏக்கள் மூலம் அடுத்த பிரச்னையை காங்கிரஸ் அரசுக்கு பாஜக எழுப்பியுள்ளது. பாஜக அல்லாத மாநிலங்களில் கட்சியை எப்படியேனும் வளர்த்து விட வேண்டும் என்று முட்டி மோதும் பாஜக புதுச்சேரியிலும் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.