ம.பி.யில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்!
இந்தூர்: மத்திய அமைச்சராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார். தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக எல்.முருகன் இருந்து வந்தார்.
Recommended Video
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் எல்.முருகன் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தமிழிசை சவுந்தராஜனுக்கு பிறகு தமிழ்நாடு தலைவராக பதவியேற்ற எல்.முருகன், மாநிலத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
தோல்வியை தந்தாலும் பரவாயில்லை என்று... தாராபுரத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுக்கும் எல்.முருகன்..!
மத்திய அமைச்சரவை
காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு, தி.மு.க.வில் இருந்து கு.க.செல்வம், வி.பி.துரைசாமி உள்ளிட்டோரை பா.ஜ.க.வில் இணைப்பதில் எல்.முருகனின் பங்கு அதிகம். இது தவிர தமிழகத்தில் பாஜக கால்பதிக்கவே முடியாது என்று கூறப்பட்டு வந்த நிலையில் பா.ஜ.க 4 இடங்களில் வெற்றி பெற எல்,முருகன் மிக முக்கிய காரணமாக இருந்தார். எல்.முருகனின் திறமை, உழைப்பை பார்த்து அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவு செய்தது பா.ஜ.க தலைமை.
இணையமைச்சர்
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் பெற்றார் எல்.முருகன். மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பதவியேற்றுக் கொண்டார். எல்.முருகன் இந்த பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் அவர் 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக வேண்டும் என்ற நிலை எற்பட்டது. தமிழகத்தின் பா.ஜ.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் இல்லாததால் புதுவையில் இருந்து எல்.முருகனை எம்.பி.யாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
எல்.முருகன்
இதற்காக புதுவை பா.ஜ,க சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ராஜ்ய சபா சீட்டை பாஜகவுக்கு ஒதுக்கும்படி கேட்டனர். ஆனால் அங்கு தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எல்.முருகன் தேர்வு செய்யப்படுவார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
மூன்றாவது முறை
இந்த நிலையில்தான் அந்த இடத்துக்கு எல்.முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே காங்கிரஸின் திருநாவுக்கரசர், பா.ஜ.கவின் இல.கணேசன் ஆகியோர் ம.பி.யில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.