டெல்லி முதல்வர் பதவியுடன் விடிய விடிய பேரம் பேசிய பாஜக: 'ஆம் ஆத்மி' குமார் விஸ்வாஸ் திடுக் தகவல்!!
டெல்லி: டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உதவினால் தனக்கு முதல்வர் பதவியையும் தருவதாக அக்கட்சி பேரம் பேசியது என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய டெல்லி சட்டசபை முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி சட்டசபை கலைக்கப்படாததால் அவ்வப்போது ஆம் ஆத்மியும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஆம் ஆத்மியின் குமார் விஸ்வாஸ் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஆங்கில நாளேட்டுக்கு குமார் விஸ்வாஸ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
கடந்த மே 19-ந் தேதியன்று இரவு 10.30மணியளவில் பாஜக எம்.பி. ஒருவர் என்னை சந்திக்க வீட்டு வந்தார். அவர் எனது நண்பர் என்பதால் நானும் பேசிக் கொண்டிருந்தேன்.
அதிகாலை 3.30 மணி வரை அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க நான் உதவ வேண்டும் என்று அந்த எம்.பி கேட்டுக் கொண்டார்.
அத்துடன் எனக்கு டெல்லி முதல்வர் பதவியையும் கூட தருவதற்கும் தயார் என்று அந்த எம்.பி. கூறினார். மொத்தம் 12 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க இருப்பதாகவும் அந்த எம்.பி. கூறினார்.
இவ்வாறு குமார் விஸ்வாஸ் கூறியுள்ளார்.
ஆனால் இதை நிராகரித்திருக்கும் பாஜக, குமார் விஸ்வாஸ் தம்மை சந்தித்த பாஜக எம்.பி.யின் பெயரை பகிரங்கப்படுத்த முடியுமா? என்று சவால்விடுத்துள்ளது.