இந்தாங்க.. ரூ.100 கோடி.. ம.பியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை ஆரம்பித்த பாஜக.. காங். புகார்
போபால்: மத்திய பிரதேச அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு பாஜக ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசியுள்ளனர் என்று காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. அதிலும் குறிப்பாக மத்திய பிரதேசத்தில் 2 முறை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை அலங்கரித்த சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியை பறிகொடுத்தார். மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது, மாநிலத்தில் தொடர்ந்து 2 முறை அடுத்தடுத்து முதலமைச்சராக அவர் பரிணமித்தார்.
ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்தும், அவரால் மத்திய பிரதேசத்தில் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. மற்ற மாநில தேர்தல் தோல்விகளை விட மத்திய பிரதேச தேர்தல் தோல்வி பாஜகவை கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாஜகவின் தலைமைக்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
தோல்வியடைந்த பாஜக
ஆட்சியின் இரட்டையர்கள் என்று பலரால் அழைக்கப்பட்ட மோடியும், அமித் ஷாவும் தோல்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று சொந்த கட்சியினரே வசைபாடும் நிலை ஏற்பட்டது. தற்போது தேர்தல் தோல்வி மறைந்தாலும், புதியதாக அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசை 100 கோடி ரூபாய் என்ற குதிரை பேரம் மூலமாக கலைக்க பாஜக முயற்சி செய்தது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்.புகார்
இது குறித்து பரபரப்பான தகவலை அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் வெளியிட்டுள்ளார். போபாலில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைஜ்நாத் குஷ்வாகாவை பாஜக எம்.எல்.ஏ. நாராயன் திரிபாதி ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்று பேசியுள்ளார்.
ரூ.100 கோடி பேரம்
இந்த சந்திப்பின் போது பாஜகவின் முன்னாள் அமைச்சர்கள் நரோத்தம் மிஸ்ரா, விஸ்வாஸ் சாரங் ஆகியோரும் இருந்தனர். மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்க்க ரூ.100 கோடி தருவதாக குஷ்வாகாவிடம் அவர்கள் பேரம் பேசியுள்ளனர்.
அமைச்சர் பதவியும் உண்டு
மேலும் புதிதாக பாஜக அரசு அமையும் போது, அமைச்சர் பதவி தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அந்த பேரத்துக்கு குஷ்வாகா உடன்பட மறுத்துவிட்டார். மத்திய பிரதேச தேர்தலில் பாஜக தோல்வியை சிவராஜ்சிங் சவுகானால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை என்று அவர் கூறினார்.
புகாரை மறுத்த பாஜக
ஆனால் திக்விஜய சிங்கின் குற்றச்சாட்டை பாஜக முற்றிலும் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது:- திக்விஜய சிங் இது போன்ற குற்றச்சாட்டுகளை ரொம்ப காலமாகவே கூறி வருகிறார். இது அவரின் சுய விளம்பர நாடகம். இந்த குற்றச் சாட்டுக்கான உரிய ஆதாரம் இருந்தால் அவர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.