ரூ2 கோடி, பெட்ரோல் பங்க்.. திரிணாமுல் எம்.எல்.ஏக்களுக்கு பேரம், மிரட்டல்... மமதா 'திடுக்’ தகவல்
கொல்கத்தா: மத்திய அரசின் பல்வேறு ஏஜென்சிகள் மூலமாக திரிணாமுல் கட்சித் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக அக்கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி சாடியுள்ளார்.
கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் திரண்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுக்கு தாவ வேண்டும் என பாஜக மிரட்டி வருகிறது. பாஜகவுக்கு வராவிட்டால் நிதி நிறுவன மோசடி வழக்குகளில் சிறைக்கு செல்ல நேரிடும் என மிரட்டுகிறது பாஜக.
எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ரூ2 கோடி பணம், பெட்ரோல் பங்க் தருவதாக பேரம் பேசுகிறது பாஜக. மத்திய பாஜக அரசு இதேபோக்கில் சென்றால் இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் நிலைக்காது.
கர்நாடகாவில் குதிரை பேரத்தை நடத்திய அதே பாணியில்தான் மேற்கு வங்கத்திலும் நடத்த முயற்சிக்கிறது. மத்திய அரசின் ஏஜென்சிகள் மூலம் கட்சி தாவ வைக்கிறது பாஜக.
இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.